9 வீட்டில் ஒத்த ரூபாய் பிச்சை.. புத்தாண்டு பிறந்த நேரம் சரியில்லையாம்.. பரிகாரம் செய்த பெண்கள்!
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை பகுதியில் புத்தாண்டு பிறந்த நேரம் சரியில்லை என யாரோ ஒரு சாமியார் கூறியதைக் கேட்டு, ஒன்பது வீடுகளில் பிச்சையெடுத்து பரிகாரம் செய்துள்ளனர் அப்பகுதி பெண்கள்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமி படையாச்சி தெருவுக்கு நேற்று இரவு சுமார் 60 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர் வந்துள்ளார். வீடு வீடாகச் சென்று யாசகம் பெற்ற அந்த சாமியார், ‘இந்தாண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த நேரம் சரியில்லை. எனவே, தாய்க்கு ஒரே பையனாக பிறந்த ஆண்களுக்கும், அந்த குடும்பத்துக்கும் ஆபத்து ஏற்படும். எனவே அந்த ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்கள் பரிகாரம் செய்யவேண்டும்.
அவர்கள் 9 வீடுகளில் தலா 1 ரூபாய் பிச்சை எடுத்து அம்மன்கோவிலில் காணிக்கை செலுத்தி, தீபமேற்றி வழிபட வேண்டும். அப்படி நடந்தால்தான் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்க்கலாம்' எனக் கூறியதாகத் தெரிகிறது.
இதனால், ஒரு ஆண் குழந்தையை மட்டும் பெற்றெடுத்த பெண்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்த தகவல் சுற்றுப்புற பகுதிகளுக்கும் பரவியது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு ஆண் குழந்தையை மட்டும் பெற்றெடுத்த பெண்கள் சாமியார் கூறியபடி 9 வீடுகளில் தலா ஒரு ரூபாய் பிச்சை எடுத்து, அதை அருகில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இதனால், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் வழக்கத்தை விட அதிக பெண்கள் கூட்டம் காணப்பட்டது.