சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கலாம் உருவப்படம்.. மலர் தூவி மக்கள் அஞ்சலி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த 'மக்கள் ஜனாதிபதி' அப்துல் கலாம் உருவப்படத்துக்கு பயணிகள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், 'மக்கள் ஜனாதிபதி' அப்துல் கலாம் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது, மேடையிலேயே மயங்கி சாய்ந்தார்.
உடனே அவரை அங்கிருந்து அந்த பகுதியில் உள்ள பெதானி என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கலாமை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் ஷில்லாங்களில் இருந்து அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து இன்று டெல்லி வந்தது. ராமேஸ்வரத்தில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
'மக்கள் ஜனாதிபதி' கலாம், நாடு முழுவதும் செல்வாக்கு பெற்றவர். அப்படியிருக்கும்போது அவரின் தாய் மாநிலமான தமிழகத்திலுள்ள மக்களுக்கு அவர் எந்த அளவுக்கு செல்வாக்குமிக்கவர் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
கலாமின் மறைவுக்கு சாமானிய மக்கள் முதல் தலைவர்கள் வரை பல வகைகளில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரம் கண்ணீரில் மூழ்கியுள்ளது. கலாமிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் உருவப்படம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கலாம் உருவப்படத்திற்கு பயணிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.