கச்சநத்தம் படுகொலை.. ஊர்மக்கள் 2-ம் நாளாக ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்.. மறியல்!
கச்சநத்தம் படுகொலையை கண்டித்து இன்றும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
சிவகங்கை: கச்சநத்தத்தில் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட சாதி மோதலில் 2 பேர் வெட்டி கொல்லப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஊர்மக்கள் 2வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் வசித்து வரும் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். கச்சநத்தம் கிராமத்தில் வசித்துவரும் சமூகத்தினர் மீது ஆவரங்காட்டில் வசிக்கும் வேறு ஒரு சமூகத்தினர் எப்போதும் தாக்குதல் நடத்துவதையே வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் கோவில் திருவிழா நடைபெற்றபோது, இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் கச்சநத்தம் கிராம மக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஆறுமுகம் மற்றும் மருது என்ற சண்முகநாதன் ஆகியோர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். இதையடுத்து, ஆதிக்க சமூக குற்றவாளிகளை அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி கச்சநத்தம் கிராம மக்கள் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கும் தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க கோரியும் அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
காத்திருப்பு போராட்டத்திற்கு முன்னதாக, ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.