தூத்துக்குடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - பொது மக்கள் முற்றுகை - தள்ளிவிட்ட போலீஸ்
தூத்துக்குடி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு திடீரென பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி: எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தூத்துக்குடி அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அடுத்துள்ள தருவைகுளம் சமத்துவபுரத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தனர்.
இந்நிலையில் மாலை கடை திறக்கப்பட்ட அவசரம் அவசரமாக மது பாட்டில்கள் பெட்டிகள் இறக்கப்பட்டு ஊழியர்கள் விற்பனை தொடங்கினர். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் திரண்டு சென்று டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்டபோது நாங்கள் முறையாக நீதிமன்ற உத்தரவுப்படிதான் கடையை திறந்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் டிஎஸ்பி, எந்த பிரச்சனை ஆனாலும் நீதிமன்றத்தில் பார்த்து கொள்ளுங்கள் என பொது மக்களை எச்சரித்தார்.
இதையடுத்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவெடுத்த பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து விரைந்து வந்து முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கடையை தள்ளியே தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
மோதல் சம்பவம் குறித்து அறிந்த தாசில்தார் நம்பிராயர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கி இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடக்கும் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.