தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து விடிய விடிய போராடிய கிராம மக்கள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து நள்ளிரவிலும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது அந்த ஆலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தாமிர உருக்காலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆலையின் அருகில் உள்ள அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுனர்.
இவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மேலும், மக்களின் சுகாதார நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து போராட்டக்காரர்களிடம் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பொதுமக்கள் நேற்று நள்ளிரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.