பாதுகாப்பு இல்லை... குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கிராமம் ஒன்றில் இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது சூரன்விடுதி கிராமம். இங்கு வாழ்ந்து வரும் இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே கடந்த சில நாட்களாக தொடர் மோதல் இருந்து வந்நதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கல்லூரி சென்று திரும்பிய ஒரு சமூகத்தை சேர்ந்த மாணவர்களை மற்றொரு பிரிவினர் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த மூன்று மாணவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை தாக்குதல் நடத்தியவர்களைப் போலீசார் கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, இதற்கு கண்டனம் தெரிவித்து ஒருதரப்பினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி, கல்லூரி செல்லம் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் குற்றம் சாட்டிய அம்மக்கள், அரசு உரிய பாதுகாப்பை வழங்க கோரி தங்கள் பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களோடு சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தங்கள் தரப்பு மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்வதோடு உரிய பாதுகாப்பு வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்காரர்கள் உறுதிபட கூறினர். தொடர்ந்து அம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.