இன்றைக்கு மட்டும் கருப்பு சட்டை போட்டு இத்தனை பேரை மெரினாவில் எப்படி அனுமதித்தது காவல் துறை ?
144 தடை இருக்கும்போது இன்றைக்கு மட்டும் மெரினாவில் கூட காவல்துறை எப்படி அனுமதித்தது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் கருப்புச் சட்டை அணிந்து வந்தாலும், கூட்டமாக கூடினாலும் தடுத்து நிறுத்திய காவல்துறை இன்றைக்கு மட்டும் எப்படி இத்தனை பேரை கருப்புச் சட்டையில் அனுமதித்தது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாணவர்கள், இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்ட போராட்டம் நடந்தது.
பத்து நாட்களுக்கு மேல் நீடித்த இந்த போராட்டம் அதிகாரத்தில் இருந்தவர்களையே அசைத்துப் பார்த்தது. சென்னையில் மெரினா மட்டுமல்லாது ஒவ்வொரு மாவட்டத்தலைநகரிலும் பெரிய அளவில் இந்த போராட்டம் வெடித்தது.
மெரினாவில் கூடிய இளைஞர்கள்
லட்சக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அத்தியாத்தையே எழுதிச் சென்றனர். எந்த ஒரு அரசியல் இயக்கத்தின் ஆதரவும் இன்றி தன்னிச்சையாக கூடிய மக்கள் சக்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்கிற அவசரசட்ட அறிவிப்பு சட்ட்பூர்வ உத்தரவாக வரும் வரை மெரினாவில் இருந்து செல்லமாட்டோம் என்று அவர்கள் எழுப்பிய கோஷம் அப்போது முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்.,க்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியது.
போராட்டத்தை கலைத்த காவல்துறை
இறுதிக்கட்ட போராட்டத்தின் முடிவில் இளைஞர்களை கலைந்து செல்ல வலியுறுத்திய காவல்துறை, அவர்கள் மீது தடியடி நடத்தி வன்முறை தாண்டவம் ஆடியது. அங்கிருந்த இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், அவர்களுக்கு உதவிய மீனவர்கள் துரத்தி துரத்தி அடித்து, அவர்களின் பொருட்களை சேதப்படுத்தி அனைத்து தரப்பினரையும் தனது வன்முறைக்கு இரையாக்கியது காவல்துறை. இதனால் காவல்துறைக்கு பெரும் கண்டனம் எழுந்தது.
தொடர்ந்து 144 தடை உத்தரவு
இளைஞர்களின் எழுச்சிக்குப் பிறகு, சுதாரித்துக் கொண்ட காவல்துறை இனி எந்த போராட்டமாக இருந்தாலும் மக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்று உணர்ந்து மெரினாவில் கூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும், அந்தப் பகுதியில் பாதுகாப்பை அதிகரித்தது. கருப்புச்சட்டை அணிந்து வருபவர்கள் அனைவரையும் நிற்கவைத்து கேள்வி கேட்டு உள்ளே விடாமல் திருப்பி அனுப்பும் அராஜகப் போக்கை மேற்கொண்டது காவல்துறை.
கருப்புச்சட்டைக்கு அனுமதி இல்லை
இதனையடுத்து அங்கு இலங்கை இனப்படுகொலையை கண்டித்து கூடிய திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் இந்தக் காரணங்களை காட்டி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம் என பிரச்னைகள் எழுந்தபோது அங்கு யாரும் போராடக்கூடாது என்றும், கருப்புச்சட்டை அணிந்து வரக்கூடாது என்றும் அதற்கு 144 தடை அமலில் இருப்பதையும் காரணம் காட்டியது காவல்துறை.
ஜெயலலிதா சமாதியில் அமைச்சர்கள்
ஆனால், இன்று இதற்கு மாறாக மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் உள்ளிட்டஆயிரக்கணக்கானோர் கருப்புச்சட்டை அணிந்து, அதே மெரினா சாலையில் ஊர்வலமாக சென்று இருக்கிறார்கள். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது காவல்துறை. அப்படி என்றால், ஏற்கனவே அமலில் இருந்த 144 தடை உத்தரவு என்ன ஆனது, இன்று தடை விலக்கிக்கொள்ளப்பட்டதா என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
சாமானியர்களுக்கு மட்டும் சட்டமா ?
144 தடை உத்தரவு என்றால், நான்கு பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடவோ, அங்கிருந்து உண்ணாவிரதம், ஊர்வலம், போராட்டம், மனித சங்கிலி போன்ற போராட்டங்கள் நடத்த தடை செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் நடந்த செவிலியர்கள் போராட்டத்தின்போது கூட, மெரினாவில் கூடுவதற்கு 144 தடை உத்தரவு இருப்பதை சுட்டிக்காட்டிய காவல்துறை இன்று அதிகாரத்தில் இருப்பவர்களை மட்டும் எப்படி அனுமதித்தது என்றும், இவர்களின் சட்டம் அதிகாரம் எல்லாம் சாமானிய மக்கள் மீது மட்டும்தான் செல்லுபடியாகுமா ? அதிகாரத்தில் இருப்பவர்கள் இவர்களின் கண்களுக்குத் தெரியமாட்டார்களா என்றும் சாமானிய மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.