மாடு விற்பனைக்கான தடையை நீக்காவிட்டால் கிளர்ச்சி ஏற்படும்...டி. ராஜா 'வார்னிங்'
மாடு விற்பனைக்கான தடையை மத்திய அரசு நீக்காவிட்டால் மக்கள் கிளர்ச்சி ஏற்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
சென்னை: மாடு விற்பனைக்கான புதிய தடையை மத்திய அரசு நீக்க வில்லை எனில், மக்கள் கிளர்ச்சி உருவாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியா செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
எருமை மாடு, பசு மாடு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய பணிகளுக்காக மட்டும் விவசாயிகள் சந்தைகளில் மாடுகளை விற்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. மத நம்பிக்கைகளுக்காக மாடுகளை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.
இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. பல்வேறு கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பால் கறக்க முடியாத நிலையில் உள்ள மாடுகளுக்கு தீவனம் போட முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய மக்களின் வாழ்க்கையில் பதற்றத்தை பாஜக உருவாக்குகிறது.
மாடு விற்பனைக்கான தடையை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் மக்கள் கிளர்ச்சி ஏற்படும். மனு சாஸ்திரத்தின் அடிப்படையில் பாஜக ஆட்சி நடத்துகிறது என்றார்.