மழை நின்ற பிறகும் இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்கும் திருநின்றவூர்
சென்னை: திருநின்றவூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பெய்த கனமழையால் திருநின்றவூரில் உள்ள பெரியார்நகர், முத்தமிழ் நகர், திருவேங்கடம் நகர் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் வெள்ள நீர் வடிய தொடங்கியது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் குளம்போல தேங்கி நிற்கிறது.
அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள், பேரல்களை படகு போல் கட்டி நீந்தி கடைகளுக்கு வந்து அத்தியவாசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். பெரும்பாலானோர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஏராளமானோர் தண்ணீரில் தத்தளித்தப்படி வீடுகளிலேயே தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள் அருகே திருநின்றவூர் ஏரி உள்ளது. தற்போது ஏரி நிரம்பி இருப்பதால் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியாமல் நிற்கிறது. பெரியார் நகர், முத்தமிழ்நகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழை நீர் இதுவரை அகற்றப்படாததால் சாக்கடையாக மாறி விட்டது. இதனால் பலருக்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதிகாரிகள் இப்பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.