பொங்கலுக்கு வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்... பேருந்து, ரயில் நிலையங்களில் மொய்க்கும் கூட்டம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ஆர்வத்துடன் இருப்பதால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விடுமுறை தொடங்கும் நிலையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் ஆர்வத்துடன் பயணத்தை தொடங்கியுள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நகரத்தில் கொண்டாடுவதை விட சொந்த ஊர்களில் அதிலும் கிராமப்புறங்களில் கொண்டாடுவது சிறப்பாக விஷயம். இதனாலேயே ஆண்டு முழுவதும் பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் பொங்கல் சமயத்தில் சொந்த ஊர் செல்ல ஆர்வத்துடனே இருக்கின்றனர்.
தொடர்ந்து 8 நாட்களாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் சொந்த ஊர் செல்ல முடியுமா என்ற குழப்பத்தில் இருந்தனர் மக்கள். பலர் ஏற்கனவே செய்த முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு மாற்று ஏற்பாடுகளை செய்தனர்.
பணிக்கு திரும்பிய ஓட்டுனர்கள்
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை ஏற்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று காலை முதல் பணிக்குத் திரும்பினர். பள்ளிகளுக்கு இன்று முதலே விடுமுறை என்பதால் 15 சதவீத மக்கள் காலை முதலே தங்களது பயணத்தை தொடங்கினர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம்
பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையானது நாளை முதலே தொடங்குவதால் பலர் அலுவலகம் முடித்த கையோடு பேருந்து, ரயில் நிலையங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் வரத்தொடங்கியுள்ளது. இன்று மட்டும் சுமார் 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ரயில் நிலையத்திலும் கூட்டம்
இதே போன்று பொங்கல் பண்டிகைக்காக தெற்கு ரயில்வே சார்பில் 8 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயிலில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
வெளியூர் செல்லும் பயணிகள் பேருந்து, ரயில் நிலையங்களை நோக்கி படையெடுப்பதால் சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னை பாரிமுனை, பூந்தமல்லி, வடபழனி சாலைகளில் வழக்கத்தை விட வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.