மக்கள் மனதில் விதைக்கப்படுவார் கலாம் - இன்று காலை 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்!
ராமேஸ்வரம்: மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கம் இன்று காலை 11 மணியளவில் பேய்க்கரும்பு கிராமத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் மேகாலயாவின் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில் நேற்று காலை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அரசு மரியாதையுடன் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் மற்றும் தமிழகத் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட கலாமின் உடல் பின்பு அவருடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று காலை கலாமின் அண்ணன் உட்பட குடும்பத்தினரால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டபின்பு, ராமேஸ்வரம் பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்று வருகின்றது.
Last rites of Former President Dr A P J Abdul Kalam at Rameswaram, Tamil Nadu. pic.twitter.com/tuMgaf1Oxl #KalamKoINCKaSalam
— INC India (@INCIndia) July 30, 2015
தொழுகை முடிவுற்ற பின்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட இருக்கின்ற அவரது உடல் முப்படையினர் மற்றும் ராணுவத்தினரின் அணிவகுப்புடன், முழு அரசு மரியாதையுடன் காலை 11 மணியளவில், பேய்க்கரும்பு கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 1.85 ஏக்கர் அரசு நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.