சுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர்.. பாடை கட்டி போராட்டம் நடத்திய மக்கள்
வள்ளியூர் அருகே சவுந்திரபாண்டியபுரத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, அப்பகுதி மக்கள் 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி 100க்கும் மேற்பட்டோர் 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சவுந்திரபாண்டியபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திலுள்ள மக்கள், இறந்தவர்களை எரியூட்ட பல ஆண்டுகளாக சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஓடைக்கரையில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஓடைகரையில் சுடுகாட்டுக்கு அருகே பஞ்சாயத்து மூலமாக ஆழ்துளை கிணறும், மயான கொட்டகையும் கான்கீரிட்டில் கட்டப்பட்டுள்ளது. தற்போது ஓடைக்கரை அருகே உள்ள நிலத்து உரிமையாளர்களால் சுடுகாட்டு செல்லும் ஓடை பாதையை ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். இதனால் இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரக்கோரி சவுந்திரபாண்டியபுரத்தில் உள்ள அம்மன் திடலில் கிராம மக்கள் கடந்த 20ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் போராட்டம் 7-வது இன்றும் தொடர்ந்தது. இன்று பாடை கட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுடுகாட்டு பாதையை ஆளுங்கட்சிப் பிரமுகர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதனால் ஓடை பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.