இடிந்த வீடுகளுக்கு வெறும் 5 ஆயிரமா?- பொதுமக்கள் வேதனை
தூத்துக்குடி: வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு அரசு வெறும் ரூ.5 ஆயிரம் தருவது வேதனையாக உள்ளது என பொதுமக்கள் தமாகா தலைவர் வாசனிடம் வேதனையை கொட்டினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் புதுக்கோட்டை காட்டாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள நீர் மறவன்மடம், அந்தோணியர்புரம், கோரப்பள்ளம் வழியாக தூத்துக்குடி நகருக்குள் புகுந்தது. கோரப்பள்ளம், அந்தோணியர்புரம், சோரீஸ்புரம் பகுதியில் ஏராளமான வீடுகள் இந்த வெள்ளத்தில் இடிந்தன.
பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கேட்டு சாலை மறியல் செய்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு அரசின் சார்பாக ரூபாய் 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி சோரிஸ்புரம் பகுதியில் வெள்ள சேதத்தை பார்வையிட வந்த தமாகா தலைவர் வாசனிடம் பொதுமக்கள் கொட்டி தீர்ந்தனர். அப்போது வீட்டை இழந்த முதாட்டி ஓருவர் தொடர் மழையால் வெள்ளம் வந்து வீடு இடிந்து விட்டது.
தற்போது இருப்பதற்கு கூட இடம் இல்லை. அரசு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் மட்டுமே தந்துள்ளது. இந்த தொகையை கொண்டு அஸ்திவாரம் கூட அமைக்க முடியாது. வீட்டில் இருந்த டிவி,. மின் விசிறி, மிக்சி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன. இதனால் எங்களுக்கு வீடு கட்ட தேவையான நிவாரணமும், சேதமடைந்த வீட்டு உபயோக பொருட்களுக்கு பதிலாக புதிய பொருட்களும் தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதுபோல் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு குறித்து அவரிடம் விளக்கினர். இதைகேட்ட அவர் உங்களின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார். சோரீஸ்புரம் பகுதியில் வெள்ளத்தில் சேதமடைந்த வீட்டு உபயோக பொருட்கள் அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் அவர் பார்வையிட்டார்.