பெரியபாளையம் அருகே ஏரியில் மணல் அள்ள எதிர்ப்பு.. லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
மணல் அள்ளும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்: ஏரியில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள், மணல் அள்ள வந்த லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியபாளையம் அருகே உள்ளது கன்னிகைபோர் ஏரி. இந்த ஏரியில் சவுடி மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கிராம மக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியது. இதற்காக பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனாலும் கிராம மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் அந்த ஏரியில் மணல் அள்ள 50-க்கும் மேற்பட்ட லாரிகள் ஒன்றன்பின்ஒன்றாக வந்தன. இப்படி மொத்தமாக லாரிகள் வருவதை கண்ட கிராம மக்கள் ஒன்றாக திரண்டனர். ஏரியில் ஒன்றுசேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் ஏரியை நோக்கி வந்துகொண்டிருந்த லாரிகளை சிறைபிடித்தனர். மேலும் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் முழக்கங்களையும் எழுப்பினர்.
தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மணல்குவாரியை எதிர்த்தும், மணல் அள்ளக்கூடாது என்பது குறித்தும் மனு எழுதி கலெக்டரிடம் தருமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.