உடல் உறுப்புகள் தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: உடல் உறுப்புகள் தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும் என திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடல் உறுப்புகள் தான தினத்தை முன்னிட்டு இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2008-ல் மூளைச் சாவு அடைந்த இளைஞர் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன்வந்தனர். அதனை சவாலாக ஏற்று திமுக அரசு செய்து முடித்ததை உடல் உறுப்புகள் தான தினத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
அன்றைய முதல்வர் கருணாநிதி ஹிதேந்திரனின் பெற்றோர்களை அழைத்துப் பாராட்டு உடல் உறுப்புகள் தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடல் உறுப்புகள் தானம் குறித்த விதிமுறைகளை ஒருங்கிணைத்து வெளியிட்டதை யாரும் மறுக்க முடியாது.
28-8-2009-ல் நானும் எனது மனைவி துர்காவும் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வந்து சென்னை மியாட் மருத்துவமனையில் அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டோம். உடல் உறுப்புகள் கிடைக்காமல் அவதிப்படும் எண்ணற்ற நோயாளிகளுக்கு புதுவாழ்வு கொடுக்க அது பேருதவியாக இருக்கும் என நான் வேண்டுகோள் விடுத்ததை இப்போது நினைவுகூர விரும்புகிறேன்.
திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் மக்களிடம் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் தான் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் முதலிடம் பெற்று விளங்குகிறது. தானம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. தமிழகத்துக்கு கிடைத்துள்ள பெருமை அனைத்து மக்களையே சாரும்.
தமிழகத்தில இந்த அற்புதமான மனிதநேயமும், அன்பும் தழைத்தோங்க வேண்டும். உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும், உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற சூரிய சிந்தனை அனைவருக்கும் ஏற்பட வேண்டும். உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரத் துறை மேலும் தீவிர முயற்சிகளில் ஈடுபட வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.