ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டங்களைவிட இது கொடுமையானது: ராம.கோபாலன்
சென்னை: மதக்கலவர தடுப்பு மசோதாவை அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
இந்துக்கள் மீது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எத்தகைய வழக்கையும் தொடுக்கலாம், குற்றம்சாட்டப்பட்ட இந்துக்கள் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை தாங்களே நிரூபித்துக்கொண்டால் மட்டுமே வழக்கிலிருந்து விடுதலைப்பெற முடியும், என்பது போன்ற கடுமையான பழிவாங்கும் ஷரத்துகள் மதக்கலவர தடுப்பு சட்ட மசோதாவில் உள்ளன.
இது நம்மை ஆக்கிரமித்து கொள்ளையடித்த ஆங்கிலேய கிறிஸ்தவர்கள், முகலாய முஸ்லிம்கள் ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டங்களைவிட கொடுமையானது.
வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற காங்கிரஸ் முனைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை ஆரம்ப நிலையிலேயே இந்துக்கள் கடுமையாக எதிர்த்ததால் அந்த மசோதா இதுவரை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை.
மாநில அரசுகள் பலவும் எதிர்த்துள்ள நிலையில், இதை கொண்டு வருவது ஜனநாயகத்துக்கு விரோதமானது, சர்வாதிகாரப் போக்குடையது. அதையும் மீறி மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்தால், இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கும் என்று எச்சரிக்கிறது.
இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கின்ற நிலையில், சிறுபான்மையினர் ஓட்டுகளை குறிவைத்து இந்த மசோதாவை கொண்டு வர மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு முனைந்துள்ளது. இது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் ஆபத்தானது. இதனை அனைத்து மக்களும் எதிர்க்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது" என இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.