காவிரி: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக தயார்: காங்கிரஸ் ஆதரிக்க தயாரா?- தம்பிதுரை
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக மக்கள் போராடி வெற்றி பெற்றதை போல் காவிரிக்காகவும் மக்கள் இயக்கமாக மாறி போராட வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 6 வாரங்கள் கெடு விதித்தும் அதை நிறைவேற்றவில்லை. கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றம் அறிவித்த திட்டம் என்றால் என்ன என்று சந்தேகம் கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற 3 மாதங்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில் காவிரி விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு அதிமுக தயாராக உள்ளது. அவ்வாறு கொண்டு வரும்போது அதை காங்கிரஸ் ஆதரிக்குமா.
காவிரி விவகாரத்தில் அனைத்து மக்களும் இணைந்து போராடி மக்கள் இயக்கமாக மாற வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக லட்சக்கணக்கில் கூடி மக்கள் எப்படி போராடினார்களோ காவிரிக்காவும் போராட வேண்டும். அதிமுகவுக்கு என்று தனிக்கொள்கை உள்ளது. மக்கள் நலனுக்காக செயல்படும் அரசு அதிமுக அரசு.
அரசியலுக்காகவே திமுக போராட்டம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்றத்தில் எங்களுடையை போராட்டம் தொடரும். மாநில அரசு வேறு, மத்திய அரசு வேறு. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றார் தம்பிதுரை.