18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கால் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது : தினகரன்
18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கால் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று டி.டி.வி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் : 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கால், தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினருமான டி.டி.வி தினகரன் இன்று கரூரில் நடக்க உள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
அதற்கு முன்னதாக அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கால் தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத ஆட்சி, அனைத்தையும் பணத்தால் செய்துவிட முடியும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
விரைவில் அந்த ஆட்சி முடிவுக்கு வரும். அதற்கு மக்கள் அனைவரும் அமமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை ஸ்டெர்லைட், நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்களின் எதிர்ப்புத் திட்டங்களை கொண்டுவர மாட்டோம் என்று உறுதியளிப்பவர்களே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் ,
கமல் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து இருப்பதை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் எதிர்த்து இருக்கிறார். அதைப்போல, நாங்களும் கடுமையாக எதிர்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.