மது பானக் கடையை மூடக் கோரி மக்கள் போராட்டம்... 4 மணி நேரம் நீடித்த பரபரப்பு
கரூர்: சேலம் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் சுமார் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறுச்சி தொகுதிக்கு உட்பட்ட சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆறுரோடு கிராமத்தில் பலமாதங்களாக அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை துவக்கபட்ட காலத்திலிருந்தே அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகளால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
அப்பகுதி பெண்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த ஊருக்கு பேருந்து நிறுத்தம் இருந்தும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றது.
இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென பிரச்சனைக்குரிய மதுபான கடையை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அரவக்குறிச்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர் கீதாஞ்சலி,வட்டாச்சியர் மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதற்குரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளபடும் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சுமார் நான்கு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.