அவதூறு பேச்சு: அதிமுக எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் மன்னிப்பு கேட்க கோரி சாலை மறியல்
திருமங்கலம்: தொகுதி மக்களின் பிரச்சினையைப் பற்றி கேட்காமல் அவதூறாக பேசிய எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திருமங்கலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் சுடுகாடு அமைக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து, ஹவுசிங்போர்டு அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. குடியிருப்பு பகுதியில் சுடுகாடு அமைக்ககூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமையன்று சுடுகாடு அமைக்கும் பணியை துவங்க கூடாது என்று பொதுமக்கள் திரண்டதால் பணியை வருவாய்த் துறையினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இந்நிலையில் திருமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ முத்துராமலிங்கம், காரில் வந்து கொண்டிருந்தார். பொதுமக்கள் எம்எல்ஏவின் காரை மறித்தனர். பிரச்னை குறித்து பேச மறுத்து, காரை எடுத்துக் கொண்டு எம்எல்ஏ சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எம்எல்ஏ எங்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அவர்களிடம் சுடுகாடு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று தாசில்தார் உறுதியளித்தார். இருப்பினும் எங்களை அவதூறாக பேசிய எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கோரி மேலக்கோட்டை விலக்கில் மதுரை நெல்லை நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.