“கேன்” குடிநீர் ஜாக்கிரதை - போலி நிறுவனங்களால் நோய் பரவும் அபாயம்
மதுரை: ஒழுங்காக சுத்தம் செய்யப்படாத தண்ணீரை விற்பனை செய்யும் நிறுவனங்களால் பலவிதமான அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஐஎஸ்ஐ முத்திரைகள் இல்லாத தயாரிப்பு நிறுவனங்களால் மக்களின் உயிருக்கே உலை வைக்கும் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப் படுகின்றன.
அத்தாட்சி பெறாத போலி குடிநீர் நிறுவனங்கள் தயாரிக்கும் குடிநீரில் "இ கோலே" கிருமிகள் இருப்பதற்கு அதிகமாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து குடித்தால் வயிற்றுப் போக்கு மஞ்சள் காமாலை டைபாய்டு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.
பாதுகாப்பான குடிநீர்:
பாதுகாப்பான குடிநீர் என்றால் அதில் "இ கோலே" என்ற கிருமிகள் இருக்கக்கூடாது.
குடிநீர் பற்றாக்குறை:
குடிநீர் பற்றாக்குறையால் பெரும்பாலானோர் "கேன்" தண்ணீருக்கு மாறி வருகின்றனர். 20 லிட்டர் கேன் 25 ரூபாய்க்கு கிடைப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் நம்பியுள்ளனர்.
ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்:
ஐஎஸ்ஐ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் அதன் பரிந்துரைப்படி "ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்" முறையை கையாள வேண்டும். மாதம் ஒருமுறை தண்ணீரின் மாதிரியை அனுப்ப வேண்டும்.
ஐஎஸ்ஐ முத்திரை:
பரிசோதனை செய்யப்பட்ட பின்பே "குடிக்க உகந்தது" என உறுதி செய்யப்படும். மதுரையில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஐஎஸ்ஐ முத்திரை பெறாமல் செயல்படுகின்றன.
"சீல்" வைக்கப்பட்ட நிறுவனங்கள்:
சமீபத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டு 20 நிறுவனங்களுக்கு "சீல்" வைத்தனர். ஆனால் இன்னும் பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் பாதுகாப்பற்ற குடிநீரை தயாரிக்கின்றன.
பாட்டில் தண்ணீர் அபாயம்:
"பல இடங்களில் வினியோகிக்கப்படும் கேன் தண்ணீர் பாதுகாப்பானதாக இல்லை" என்கின்றனர் அரசு டாக்டர்கள்.
கைகளால் பரவும் கிருமி:
"ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்" முறையில் இ கோலே கிருமியின்றி மினரல்கள் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். வீடுகளில் கேன் தண்ணீரை ஊற்றியபின் கேன் விளிம்புப் பகுதியை பிடித்து எடுத்துச் செல்லும் போது கைகளில் உள்ள "இ கோலே" கிருமிகள் கேனுக்குள் சென்று விடும்.
சுத்தம் செய்வதில்லை:
ரசாயன சுத்தமும், அதன்பின் ஓடும் வேகமான தண்ணீரிலும் கழுவும் போது தான் கிருமி வெளியேறும். பெரும்பாலான போலி நிறுவனங்கள் பெயருக்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கழுவிய பின் மீண்டும் நிரப்புவதால் கிருமிகள் தங்கிவிடும்.
பாக்கெட்டும் ஆபத்துதான்:
இத்தண்ணீரை குடிப்பதால் உடலுக்குத் தான் கேடு. கேன் தண்ணீர் மட்டுமல்ல, ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பாக்கெட் தண்ணீரை குடிப்பதும் ஆபத்து என்று தெரிவித்தனர்.