தூத்துக்குடியில் இருந்து போலீஸ் வெளியேறினால்தான் இயல்பு நிலையே திரும்பும்.. மக்கள் கருத்து
போலீசார் வெளியேறினால்தான் இயல்பு நிலை திரும்பும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
தூத்துக்குடி: எங்கு பார்த்தாலும் காக்கி சட்டைகளின் தலைகள்.. போலீசாரின் பூட்ஸ் எழும்பும் ஓசைகள்.. ஆங்காங்கே தரைகளில் லத்திகளை தட்டும் சத்தங்களை கேட்டு மிரண்டு போயுள்ளனர் தூத்துக்குடி மாவட்ட மக்கள். என்ன தவறு செய்துவிட்டோம், ஏன் இந்த நிலை என்று தெரியாமல் விட்டத்தை பார்த்து 4 நாட்களாக பசி, பட்டினியுடன் பொழுதை கழிக்கும் அவலத்தில் உழன்று வருகின்றனர். பெரியவர்களுக்கு நடந்தவைகளின் விவரங்கள் தெரியும் என்றாலும், நோயாளிகளும், சிறுவர், சிறுமியர்கள், கைக்குழந்தைகளும் இந்த அவலத்தின் பிடியில் சிக்கி வருகின்றனர்.
ஒரு பக்கம் இயல்பு நிலை திரும்புகிறது என்று மாவட்ட ஆட்சியர் பேட்டி அளிக்கிறார். மற்றொரு புறம் ஆளில்லா விமானம் மூலம் கலவர பகுதி கண்காணிக்கப்படுகிறது என்ற தகவல்கள் வந்தடைகின்றன. மாவட்டத்தின் நிலவரம் உண்மையிலேயே என்ன என்பது குறித்து அறிய களத்திலேயே நேரிடியாக சில பகுதிகளில் பயணிக்க நேர்ந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பொதுமக்கள் அனைவரும் கூறிய ஒட்டுமொத்த கருத்தின் சாராம்சம்.. "போலீசார் மாவட்டத்தை விட்டு வெளியேறினால்தான் இயல்புநிலையே திரும்பும்" என்று பயம் கலந்த வார்த்தைகளுடன் ஒரே மூச்சாக பேசி முடித்தார்கள். இதோ அவர்கள் தெறித்த பீதி வார்த்தைகள் உங்களுக்காக:
அசாதாரண சூழ்நிலை
குமாரெட்டிபுரம் பகுதி: எந்தவித கடைகளும் இதுவரை திறக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் இன்டர்நெட் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஒரு வர்த்தக நகரம். இதனால் இணையதள சேவை இல்லாமல் வணிக ரீதியாக மட்டுமல்லாமல் மாணவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது ஏதோ காட்டுக்குள்இருக்கக்கூடிய சூழல் போல தெரிகிறது, மாவட்டத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் மெத்தனபோக்கு ஏதோ மிகப்பெரிய அழிவை தூத்துக்கடி சந்திக்குமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. பேருந்துகளும் இயக்கப்படவில்லை இதனால் இன்று திருமணத்திற்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
தைரியமாக நடமாட இயலவில்லை
பண்டாரம்பட்டி பகுதி: 15 பேர் கொண்ட குழுவாக ஆட்சியர், ஐ.ஜி உள்ளிட்டோரை சந்தித்து பேசினோம். அப்போது விரைவில் பிரச்சனை தீரும், தூத்துக்குடி இயல்பு நிலைக்கு கொண்டுவந்துவிடுவோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் நேற்றிரவு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் போலீசார் வீடுகளுக்குள் நுழைந்து இளைஞர்கள் சிலரை அத்துமீறி கைது செய்துள்ளனர். இதனை ஆட்சியர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்டத்தில் இயல்பு நிலை வரவேண்டுமென்றால் போலீசாரை முதலில் தூத்துக்குடியிலிருந்து வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் இயல்பு நிலை திரும்பும். போலீசார்கள் ஏராளமானோர் இங்கேயே நடமாடிக் கொண்டிருந்தால் பொதுமக்களால் தைரியமாக நடமாட முடியவில்லை. ஒருவித பய உணர்வுடனே செல்ல வேண்டி நிலை உள்ளதால், இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
நிம்மதியாக படுக்க முடியவில்லை
மடத்தூர் சில்வர் புரம் பகுதி: எங்களால் வீட்டிற்குள்ளே நிம்மதியாக படுக்க கூட முடியவில்லை. கடை இன்றி மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். குடும்பத்துடன் தற்கொலையே செய்து கொள்ளலாம் போல உள்ளது. நான் சாப்பிட்டு 4 நாளாகிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா? இயல்பு நிலை திரும்ப எவ்வளவு நாளாகும் என தெரியவில்லை. சில நேரங்களில் போலீசார் பாதுகாப்பாகவும் உள்ளனர். ஆனால் சில நேரங்களில் அத்துமீறியும் இளைஞர்களை கைதும் செய்து செய்கின்றனர்.
காய்கறி விலை உயர்வு
அலங்கார்தியேட்டர் பகுதி: கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி சிரமப்படுகின்றோம். அதையும் மீறி வேறு பகுதிகளுக்கு சென்று காய்கறிகள் வாங்கினால் பொருட்களின் விலை மிக அதிகமாக சொல்கிறார்கள். 10 ரூபாய்க்கு விற்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் தற்போது 30 ரூபாய், 40 ரூபாய் சொல்கிறார்கள்.
திரும்பும் திசையெல்லாம் போலீஸ்
மாவட்ட பகுதியை சேர்ந்தவர்: துப்பாக்கி சூட்டிற்கு பின்னர் தூத்துக்குடியில் அதிக அளவு காவலர்கள் இறக்கப்பட்டுள்ளனர். திரும்பும் திசையெல்லாம் காவல்துறை தலைகள் தெரிகின்றன. பொதுமக்கள் வெளியே வரமுடியவில்லை. தற்போது இந்த மாவட்டமே தனிமைப்படுத்தப்பட்டு கிடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் இயல்பு நிலை திரும்பும் என்று சொல்லியும், காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் செல்கிறது. எனவே போலீசாரின் எண்ணிக்கையை குறைப்பதுடன், இன்டர்நெட் சேவை மக்களை சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குண்டுகள் சத்தம் அகலாது
99 நாட்கள் அறம் காத்து போராடிய மக்கள், இன்னமும் இயல்பு நிலைக்கு வராமல் தவித்து வருவது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது அவர்களின் பேச்சினில் வெளிப்பட்டது. இனி இதுபோன்ற அவலம் எந்த காலத்திலும் தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்று ஒவ்வொருவரும் இந்த 4 நாட்களில் நினைத்துள்ளனர் என்பதையும் நம்மால் உணர முடிந்தது. விரைவில் போலீசாரை வெளியேற்றி சொந்த மாவட்டத்தில் உரிமையுடன், அச்ச உணர்வின்றி நடமாடும் சூழலை அரசு எந்நேரம் உருவாக்கி தருமோ என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இயல்பின் சராசரியை விரைவில் அடைந்துவிட்டாலும், அந்த துப்பாக்கி குண்டுகள் துளைத்த சத்தம் அவர்களின் செவிகளை விட்டு அகல பல காலம் ஆகும் என்பது மட்டும் நிதர்சனம்.