மீண்டும் திரும்புகிறதா இருண்ட காலம்? சென்னையில் தினமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு:மக்கள் அதிர்ச்சி
தலைநகர் சென்னையில் தினமும் அறிவிக்கப்படாதமின்வெட்டால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் மின்பற்றாக்குறை இல்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத் தலைநகரான சென்னையில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையின் முக்கியப் பகுதிகளான ஆர்.ஏ. புரம், கோட்டூர் புரம், மந்தைவெளி, அடையாறு, நங்கநல்லார், ஆலந்தூர் மற்றும் வடசென்னை பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.
ஏற்கனவே கோடை காலம் நிலவி வருவதால், இரவு நேர மின் தடைகளால் மக்கள் அதிக வெப்பத்தாலும் கொசுக்கடியாலும் அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தால், மின் தடை எங்கும் இல்லை என்று தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசுகையில், தற்போது கோடை காலம் என்பதால் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக, மின் தடை சில இடங்களில் ஏற்படுகிறது. அதனை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து வருகிறார்கள். அனைத்து மின் நிலையங்களும் சரியாக பராமரிக்கப்பட்டு வருவதால் மின் தடை என்கிற பேச்சிற்கே இடமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.