ராமேஸ்வரத்தில் தொடர் கன மழையால் நெடுஞ்சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்து வரும் தொடர்மழையால் ரோடுகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தேங்கிய நீரை உடனடியாக அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் ராமேஸ்வரத்தில் நேற்றுமுன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை 9 மணி வரை இடைவிடாமல் பெய்தது.
தொடர்ச்சியாக பெய்த மழையால் ராமேஸ்வரம் பஸ் நிலையத்தில் இருந்து கோவில் வரை தண்ணீர் முழங்கால் அளவுக்குத் தேங்கியது. தாழ்வான பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலையிலும் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மற்றும் வாகன ஓட்டிகளும் பாதிப்படைந்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகர் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தேங்கும் மழை நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே ராமேஸ்வரம் சீதா தீர்த்தம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.