சட்டசபை தேர்தலில் வைகோ தலைமையிலான கூட்டணிக்கு 5.4% பேர் மட்டுமே ஆதரவு!!
சென்னை: சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு 5.4 சதவிகித மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தமிழக அரசியல் களம் படு பரபரப்பாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நலக்கூட்டணி ஆகிய கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று சென்னை லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலானமக்கள் ஆய்வகம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
மக்கள் ஆதரவு
அதிமுக, திமுக, மக்கள் நலக்கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய யார் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தருவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில், மக்கள் நலக்கூட்டணிக்கு 5.4 சதவீத பேர் ஆதரவு கூறியுள்ளனர்.
தேமுதிக இடம்பெறவில்லை
விஜயகாந்த் இன்னமும் எந்த கூட்டணியில் சேருவது என்று முடிவெடுக்கவில்லை. தன் தலைமையிலான கூட்டணிக்கு வாருங்கள் என்று யாரையும் விஜயகாந்த் அழைக்கவில்லை என்பதால் எந்த கட்சி தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகம் என்ற கேள்வியில் தேமுதிக இடம் பெறவில்லை.
வாக்கு சதவிகிதம்
அதே நேரத்தில் இன்றைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மக்கள் நலக்கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வுக்கு 1.5 சதவிகிதம், இடது சாரிகளுக்கு 1.2 சதவிகிதம் பேரும் விடுதலை சிறுத்தைகளுக்கு 1.2 சதவிகிதம் பேரும் வாக்களிக்கப்போவதாக கூறியுள்ளனர்.
மக்கள் நலக்கூட்டணி
மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியுள்ளன. அதிமுக, திமுகவிற்கு மாற்று என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது மக்கள் நலக்கூட்டணி.
கூட்டு இயக்கம் கூட்டணியானது
மக்களின் நலன் காக்க போராட்டங்கள் நடத்துவதற்காக மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் உருவானது. இதில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மனிதநேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் இணைந்தது. திடீரென்று காந்திய மக்கள் இயக்கம் விலக, தேர்தலில் கூட்டு சேரமாட்டோம் என்று மனிதநேய மக்கள் கட்சியும் விலகியது.
நால்வர் அணி
மக்கள் நலக்கூட்டணியில் 4 கட்சிகள் இப்போது உள்ளன. இந்த கூட்டணியை வலுப்படுத்த தேமுதிகவிற்கும், தமாகாவின் வாசனுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் வாசனும், விஜயகாந்தும் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. இந்த நிலையில் 5.4% மக்களின் ஆதரவு மட்டுமே மக்கள் நலக்கூட்டணிக்கு கிடைத்துள்ளது.