ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றியதால் பதற்றம்.. தாம்பரத்தில் பெண்கள் சாலை மறியல்
தாம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.
சென்னை: தாம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி மிகவும் பரபரப்பாக இருக்கிறது.
தாம்பரத்தை அடுத்த சசிவர்தா நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள்,கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக இந்த வேலை நடப்பதை அடுத்து இன்றும் பொதுப்பணித்துறை அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றது.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை அங்கு பார்வையிட வந்திருந்த போது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் பொதுப்பணித்துறையினர் மக்கள் எதிர்ப்பையும் மீறி தாம்பரம் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்பு இடங்களை பார்வையிட்டது.
இதனால் அப்பகுதி பெண்கள் சுமார் 200 பேர் சசிவர்தா நகர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதனைத்தொடர்ந்து தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, அந்த பகுதி நிர்வாகிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர்கள் தற்போது தாம்பரம் வருவாய் கோட்டாச்சியரிடமும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.