உருப்படியாக முடிவு எடுக்க திணறும் எடப்பாடி அரசு... அதிருப்தியில் மக்கள்
தமிழக அரசுத் துறை பணிகளுக்கான டெண்டர் ஒப்பந்தங்கள் கோருவதில் சசிகலா தரப்பினரின் தலையீடு இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் முக்கிய முடிவுகள் எடுப்படாமல் சசிகலா தரப்புக்கும், மத்திய அரசுக்கும் தலையாட்டி பொம்மையாக செயல்படுவதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் விசுவாசியான எடப்பாடி பழனிச்சாமி அரசு பொறுப்பேற்றது. அப்போது பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரும் இந்த அரசு சசிகலாவின் பினாமி அரசாகதான் செயல்படும் என்றும் சசிகலா ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கும், எடப்பாடி அரசுக்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை என்றும் மக்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
வர்தா புயல், ஜல்லிக்கட்டு, ஆந்திரத்தில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அனைத்து தரப்பினரிடமும் சபாஷ் பெற்றார்.
நீட் தேர்வு
மருத்துவ சேர்க்கைக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் என்ற நுழைவுத் தேர்வை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அமல்படுத்தியது. அது இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் கல்வித் தரம் மாறியுள்ள நிலையில் இதற்கு ஜெயலலிதாபோல் கடுமையாக எடப்பாடி பழனிச்சாமி போராடாமல் உள்ளதால் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ளார்.
நெடுவாசல்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று நெடுவாசல் மக்கள் கடந்த 18 நாள்களாக போராடி வருகின்றனர். பழனிச்சாமி அரசின் செயலற்ற தன்மையால், விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது, எனவே போராட்டத்தை கைவிடுமாறு அவர் கூறியும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தாமிரபரணி
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு எடப்பாடியால் உருப்படியாக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை.
ரேஷன் கடைகள் முற்றுகை
ஜெயலலிதாவால் ஏழை மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இலவச அரிசி திட்டம், மானிய விலை பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இப்பொருள்களை கொள்முதல் செய்ய இதுவரை டென்டர் விடப்படாததால் தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டங்கள் ஆகியன நடந்தேறுகின்றன.
இலங்கை கடற்படை அட்டகாசம்
கோடியக்கரை, ராமேஸ்வரம் ஆகிய கடல்பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மீனவர்களையும் 100-க்கும் மேற்பட்ட படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்றுள்ளது. இதனால் மீனவ மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த நிலையிலும் போர்க்கால அடிப்படையில் பிரதமரை நேரடியாக சந்தித்து முடிவு எடுக்காமல் ஜெயலலிதா போல் இன்னும் கடிதம் எழுதிக் கொண்டே இருக்கிறார் எடப்பாடியார்.
சசிகலா தரப்பு தலையீடு?
தமிழக ரேஷன் கடைகளில் டென்டர் விடப்படாதது, அரசுத் துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ள டென்டர் விடப்படாதது ஆகியவற்றுக்கு சசிகலா தரப்பினரின் தலையீடே காரணம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா இருந்தபோது எப்படி தமிழக அரசின் டென்டர்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கே வழங்கி கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். இந்நிலையில் தற்போதும் அதேபோல் சசிகலா தரப்பினர் நிழல் போல் தொடர்ந்து அரசுக்கு மேலும் மேலும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.
முடிவு எடுக்க திணறல்
எல்லாவற்றிலும் சசிகலா தரப்பு தலையீடு இருப்பதால் பொதுமக்களுக்கு சாதகமான எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி திணறி வருகிறார். பொறுப்பேற்ற சிறிது நாள்களிலேயே பெட்ரோல், டீசல் மீதான, 'வாட்' வரியை உயர்த்தியுள்ளார். இதனால், தமிழகத்தில், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நொந்து கொள்ளும் மக்கள்
கொஞ்ச நாள்களிலேயே இந்த அரசின் மெத்தனத்தால் நாக்கு தள்ளுகிறதே இன்னும் 4 ஆண்டுகள் எப்படி சமாளிப்பது என்று பொதுமக்கள் நொந்து கொள்கின்றனர். முதல்வரின் அரசுக்கு அனைத்து வகையிலும் குடைச்சல் வருவதால் அவரது ஆட்சி நீடிக்குமா அல்லது கவிழ்க்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.