மூடியே கிடக்கும் எம்.எல்.ஏக்கள் அலுவலகங்கள் திறப்பது எப்போது? ஈரோடு மக்கள் வேதனை!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள் பராமரிப்பின்றி கிடப்பதால் அதனை உடனடியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மக்களை சந்திப்பதற்காக 243 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டது. 1996 ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த அலுவலகங்கள் கட்டப்பட்டன.
ஆனால் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது அலுவலகத்தை பயன்படுத்துவதே இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சி அலுவலகத்தையே பயன்படுத்தி வருகின்றனர். நிர்வாக காரணங்களால் அவ்வாறு செயல்படுவதாக கூறப்பட்டாலும் வாஸ்து காரணங்களுக்காகத்தான் அலுவலகங்களை பயன்படுத்தாமல் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
யாருமே பயன்படுத்துவதில்லை
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தை தவிர மற்றவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பயன்படுத்துவதில்லை. தொகுதி மறு சீரமைப்பில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி என்பதாலும் கே.வி.ராமலிங்கம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது கட்டியது என்பதால் அலுவகத்தை பயன்படுத்தி வருகிறார்.
பாதியிலேயே பறிக்கப்பட்ட பதவி
கிழக்கு தொகுதியில் கடந்த 2001-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.எஸ்.தென்னரசு அப்போது அந்த அலுவலகத்தை பயன்படுத்தினார். அடுத்த தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன்பின்னர் இருந்த என்.கே.கே.பி.ராஜாவுக்கு பாதியிலேயே அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அடுத்து தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த தே.மு.தி.க சந்திரகுமார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பயன்படுத்தினார்.ஆனால் தற்போது தி.மு.க.வில் உள்ளார்.
பயன்படுத்தாத அலுவலகம்
இந்த காரணங்களால் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான கே.எஸ்.தென்னரசு காளிங்கராயன் தங்கும் விடுதியின் ஒரு பகுதியை பயன்படுத்தி வருகிறார். இதேபோல் பெருந்துறை, மொடக்குறிச்சி, அந்தியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அலுவலகத்தை பயன்படுத்துவதில்லை.
செயல்பட நடவடிக்கை தேவை
பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. இதனை பாதுகாக்க வாடகை கட்டிடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களை பூட்டிகிடக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.