ஜெ.க்குதான் ஓட்டு.. எடப்பாடி பழனிச்சாமியை யார் என்றே மக்களுக்கு தெரியாது: டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கு
மக்கள் அதிமுக என்ற கட்சிக்காக வாக்களிக்கவில்லை. தேர்தல் நடைபெற்ற நேரத்தில் இப்போது முதல்வராக அமர்ந்திருக்கும், எடப்பாடி பழனிச்சாமி யார் என்பதே மக்களுக்கு தெரியாது. என்று, டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
சென்னை: தேர்தல் நடைபெற்றபோது எடப்பாடி பழனிச்சாமியை யார் என்றே மக்களுக்கு தெரியாது என்று திமுக செய்தித்தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு சமயத்தில் திமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சபைக்கு வெளியே போட்டுவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் முழுக்க இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
தங்கசாலை பகுதியில் நடைபெற்ற உண்ணா விரதத்தில் திமுக செய்தித்தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான திமுக எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், "அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க மக்கள் வாக்களித்து ஜெயலலிதா என்ற ஒரு பிம்பத்திற்காகத்தான்.
மக்கள் அதிமுக என்ற கட்சிக்காக வாக்களிக்கவில்லை. தேர்தல் நடைபெற்ற நேரத்தில் இப்போது முதல்வராக அமர்ந்திருக்கும், எடப்பாடி பழனிச்சாமி யார் என்பதே மக்களுக்கு தெரியாது. எனவே இந்த ஆட்சி மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சி.
சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நியாயமானது. ரகசிய வாக்கெடுப்பை நடத்தக் கூடாது என்று சட்டசபையில் எந்த விதிமுறையும் கிடையாது. இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.