சக்கை போடு சர்ஜிகல் எபெக்ட்... திரும்பிய திசையெங்கும் கியூ... டிஜிட்டல் இந்தியாவின் மறுபக்கம்!
வங்கிகள், ஏடிஎம்கள், இ-சேவை மையங்கள், ரேஷன் கடை என கடந்த சில நாட்களாக எல்லா இடங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
சென்னை: பெரும்பாலான இடங்களில் வங்கிகள், ஏடிஎம்கள் மட்டுமின்றி இ-சேவை மையங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடப்பதைக் காணமுடிகிறது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி திடீரென அறிவித்தார். இதையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆதார் அட்டை அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால் அன்றாட செலவுக்குக் கூட பணம் இல்லாமல் தவித்த மக்கள் அதிகாலை முதலே வங்கிகள், ஏடிஎம்கள் , அஞ்சலகங்கள் என வரிசைக் கட்டி நின்றனர். ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு வந்து 10 நாட்களுக்கு மேலாகியும் பெரும்பாலான இடங்களில் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் இன்னும் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை.
வங்கிகளில் கியூ
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் எந்தப் பகுதிக்கு சென்றாலும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காணமுடிகிறது. வங்கிகளில் பணம் மாற்ற மற்றும் டெபாசிட் செய்ய என 2 வரிசையில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
அஞ்சலகங்கள்
இதேபோல் அஞ்சலகங்களிலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும் புதிய ரூபாய் நோட்டுகளையும் பெறவும் மக்களின் நீண்ட வரிசை காணப்படுகிறது.
பெட்ரோல் பங்குகள்
பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டு மூலம் பணம் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்ததையடுத்து அங்கேயும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கையில் இருக்கும் காசு செல்லாமல் போனதால் எல்லா ஏடிஎம்களிலும் செலவுக்கு பணம் எடுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மின்வாரிய அலுவலகம்
ரூபாய் மாற்ற அறிவிப்பால் மின்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மக்கள் அரசு பழைய நோட்டு மின்வாரியங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் என அரசு ஒரு வழியாக அறிவித்ததது. இதனால் மக்கள் கால் கடுக்க மின்சார வாரிய அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர்.
ரேஷன் கடை
ரேஷன் கடைகளில் எப்போது நீண்ட வரிசையில் தான் மக்கள் நிற்பார்கள். இருந்தாலும் மக்களிடையே ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டால் அங்கேயும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இ சேவை மையங்கள்
போதா குறைக்கு அரசு சலுகைகளை பெற ஆதார் அட்டை அவசியம் என்றும் ரேஷன் கார்டுகளில்் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும், ரூபாய் நோட்டு மாற்ற ஆதார் அட்டை தேவை என்ற அறிவிப்பால் ஆதார் இ சேவை மையங்களிலும் மக்கள் கூட்டம் வழிந்தோடுகிறது.
பிக் பசார்
பிக் பசாரிலும் டெபிட் கார்டு மூலம் பணம் பெறலாம் என அரசு அறிவித்துள்ளதால் அடுத்து அங்கேயும் நீண்ட கியூவை எதிர்பார்க்கலாம்... பணம் மாற்ற, எடுக்க, ரேஷன் கடை, கரண்ட் பில் என எல்லா இடங்களிலும் நின்றே பாதி நாள் கடந்து விடுவதாக கூறும் மக்கள் இதனால் தங்கள் வேலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்...