தொகுதிப் பக்கம் வரமுடியாது பாத்துக்குங்க... அதிமுக எம்எல்ஏக்களுக்கு தொண்டர்கள் எச்சரிக்கை
சசிகலாவுக்க ஆதரவு தெரிவிக்கும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: அதிமுக எம்எல்ஏக்களுக்கு தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தால் தொகுதி பக்கம் வரவிட மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஓபிஎஸ்க்கும் சசிகலாவுக்கும் வெடித்துள்ள மோதலால் தமிழக அரசியல் தொடர்ந்து திடீர் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக எம்எல்ஏக்களின் பெரும்பான்மையை நிரூப்பிக்க சசிகலா அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூரில் 5வது நாளாக சிறை வைத்துள்ளார்.
பெரும்பாலான மக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தங்கள் தொகுதி எம்எல்ஏக்களும் ஓபிஎஸ்க்குதான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொகுதி பக்கம் விடமாட்டோம்
இந்நிலையில் சசிகலா பிடியில் உள்ள எம்எல்ஏக்கள் அவருக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தால் தொகுதி பக்கம் வரவிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை
திருப்பூர், பல்லடம் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அப்பகுதி அதிமுக தொண்டர்கள் மற்றும் பொ.துமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் வடக்கு விஜயக்குமார், தெற்கு குணசேகரன், பல்லடம் நடராஜனுக்கு அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் எதிர்காலத்தை இழப்பீர்கள்
தொண்டர்கள், மக்கள் கருத்துக்கு மாறாக செயல்படக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீறும் எம்எல்ஏக்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் பொது மக்கள் எச்சரித்துள்ளனர்.
எம்எல்ஏக்களுக்கு எதிராக கொந்தளிப்பு
திருப்பூர், பல்லடத்தை போன்று பல்வேறு தொகுதிகளிலும் சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களுக்கு எதிராக மக்கள் கொந்தளித்துள்ளனர். எம்எல்ஏக்கள் வராததால் தொகுதிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமைச்சர்களை கண்டுபிடிச்சு கொடுங்க
ஏற்கனவே ஏராளமான எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை காணவில்லை என பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். எம்எல்ஏக்களின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் இருப்பிடம் தெரியவில்லை என்றும், உடனடியாக எம்.எல்.ஏ.க்களை கண்டுபிடித்து தருமாறு போலீசில் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
தொடர்புகொள்ள முடியவில்லை
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் செல்போன்கள் 5வது நாளாக அணைத்து வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தீபா ஆதரவாளர்கள் புகர்
நாமக்கல் காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஜெ.தீபா ஆதரவாளர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அதில் திருச்செங்கோடு, நாமக்கல், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன எம்எல்ஏக்கள்
மேலும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை காணவில்லை என வேதாரண்யம் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வளர்மதியை காணவில்லை என ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, நிலக்கோட்டை, பெரியகுளம் எம்.எல்.ஏ.க்கள் மீதும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி
சசிகலா பிடியில் உள்ள சில எம்எல்ஏக்களின் தொகுதிகளில் அந்தந்த எம்எல்ஏக்களை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பொதுமக்களின் எதிர்ப்பால் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.