மோடி தமிழகம் வரும் நாள் துக்க நாள்... காவிரி வாரியம் அமைக்கும் வரை போராடுவோம் - ஸ்டாலின்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தட்டிக்கழிக்கிறது. மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
திருவாரூர்: பிரதமர் மோடி தமிழகம் வரும் நாளை துக்க தினமாக அனுசரிப்போம் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் திமுக செயல்தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் நடந்து சென்ற ஸ்டாலின் மாட்டு வண்டி ஓட்டிச்சென்றார். திருவாரூர் மேல வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி, துர்காலயா தெரு வழியாக சென்று காட்டூர், பவித்ரமாணிக்கம், திருக்கண்ணமங்கை, குழிக்கரை, வழியாக தேவர்கண்டநல்லூர் சென்ற ஸ்டாலின், பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் பேசினார்.
காவிரி உரிமை மீட்பு பயணத்தினால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி மூலமாக, உணர்ச்சி வாயிலாக நாம் எதிர்பார்த்தபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தே தீரும் என்றார். நாற்காலியே போய்விடும் என்று பயந்து அஞ்சிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. குட்கா ஊழலில் அனைவருக்கும் தொடர்பு உள்ளது என்றாலும் அனைவரும் பதவியில் நீடிக்கின்றனர். அனைவரின் பெயரும் வருமானவரித்துறை அனுப்பிய பைலில் இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென இறுதியான, உறுதியான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தாலும், ஸ்கீம் என்றால் என்ன? என்று விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
ஸ்கீம் என்றால் என்ன என்று அகராதியை எடுத்துப் பார்த்தாலே தெரியும். நல்ல வேளை ஸ்கீம் என்றால் என்ன என்று ஸ்பெல்லிங் கேட்காமல் விட்டு விட்டார்கள். மத்திய அரசுக்கு எல்லாமே தெரிந்திருந்தும் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூங்குபவர்களை எளிதில் எழுப்பி விடலாம். ஆனால் தூங்குவது போல நாடகம் நடத்தி கொண்டிருப்பவர்களை எழுப்ப முடியாது.
காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கும், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை தொடர்ந்து இழைத்து வருகின்றன. அதிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதற்கு பல போராட்ட களங்களை வகுத்து வருகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை தொடர்ந்து போராடுவோம்.
திமுக தலைவர் கருணாநிதியின் ஆசியுடன் இந்த பயணம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாம் கூறுவதை கேட்டு அவரால் பேச முடியாவிட்டாலும் கண்ணசைவினால் பதில் செல்கிறார் தலைவர் கருணாநிதி
கருணாநிதி தொண்டை குழியில் ட்யூப் போடப்பட்டுள்ளது. ட்யூப் வழியாகத்தான் சுவாசம் நடக்கிறது . உணவு வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையிலும் வாழ்த்துங்கள் என்று கூறிய உடன் கையை தூக்கி என் தலையில் வைத்து வாழ்த்தினார். காவிரி பிரச்சினைக்காக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கும் அனைவரையும் வாழ்த்தினார். அவரது வாழ்த்துடன் நடைபெறும் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.
இன்றைக்கு தமிழ்நாடு ஒரு துக்க நாள் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போது நாம் ஒவ்வொருவர் வீட்டிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும், என்ன ஏற்றுவீங்களா? எல்லாம் பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்று கூறினார் ஸ்டாலின்.