மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் சகாயம்.. முதல்வன் பட பாணியில் ஆட்சி.. மக்கள் கோரிக்கை!
சென்னை: அதிமுக, திமுகவுக்கு மாற்றாக, சகாயம் போன்ற ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து வைகோ, திருமா உள்ளிட்டோர் இணைந்துள்ள மக்கள் நல கூட்டணி, தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்புக்கு வழியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
திமுக, அதிமுக ஆகியவற்றின் ஆட்சியை மக்கள் நீண்ட நெடுங்காலமாக பார்த்தாகிவிட்டது. இன்றைய நவீன யுகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை. செல்போனை கூட வருடம் ஒருமுறை மாற்றும் இந்த சமூகம், ஆட்சியாளர்களை தொடர்ச்சியாக உட்கார வைத்து, தேக்கமடையச் செய்ய விரும்பாது என்கிறது கள நிலவரம்.
அப்படியே இருவரில் ஒருவரை தேர்ந்தெடுத்தாலும், பெரிய மாற்றத்தை எதையும் நம்மால் எதிர்பார்க்க முடியாது. எப்படியும், மக்கள் நம்மில், இருவரில் ஒருவரைத்தானே தேர்வு செய்வார்கள் என்ற எண்ணம் ஆட்சியாளர்களை புதிய திட்டங்களை கொண்டுவர விடாது.
பணம் கொடுத்தா ஓட்டு
ஓட்டுக்கு பணம், இலவசங்கள், டாஸ்மாக் இவற்றை தொடர்ந்துகொண்டிருந்தால் போதுமானது என்ற எண்ணம்தான் இரு கட்சிகளுக்கும் வந்துவிடும். இவ்விரு கட்சிகளுமே தங்கள் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய ஒரு ஓய்வு தேவைப்படுகிறது.
இம்முறை பல வாய்ப்பு
இந்த இரு கட்சிகளை தவிர்த்தால், வரும் சட்டசபை தேர்தலுக்கு வேறு பல வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. மக்கள் நலக் கூட்டணி, பாமக, நாம் தமிழர், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்றவை இம்முறை தனித்தனியாக தேர்தலை சந்தித்து மக்களுக்கு மாறுபட்டு வாக்களிக்க வாய்ப்புகளை வழங்க உள்ளன.
தேசிய தலைமை நோ
இதில், பாரதிய ஜனதாவும், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தேசியத்தலைமையின் கீழ் இயங்குபவை என்பதால், தமிழகம் சார்ந்த தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தன்னிச்சையாக முடிவை எடுக்க முடியாது. இங்கு வெளி மாநிலத் தலைமை எடுபடாது என்ற தோற்றமே களத்தில் நிலவுகிறது.
பாமகவின் பலம், பலவீனம்
பாமக அறிவிக்கும் திட்டங்களும், அதன் செயல்பாடுகளும், ஈர்க்கும் வகையிலும், புதிய பார்வையை உருவாக்கும் வகையில் இருந்தாலும், ஜாதி முத்திரை தொடர்ந்து குத்தப்பட்டு வருகிறது. மேலும் பாமக வட மாவட்டங்களில் இருக்கும் அளவுக்கு தென் மாவட்டங்களில் வலுவானதாக இல்லை. இக்குறைபாடுகளை களைந்தால் ஆட்சியமைப்பதில் பாமகவுக்கு வாய்ப்பு அதிகரிக்கும்.
சீமான் படை
நாம் தமிழர் கட்சி, தமிழர்கள் குறித்த அக்கறையுடன் அரசியல் செய்துவருகிறது. பல துணை இயக்கங்களை அரவணைத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளில் நாம் தமிழர் ஈடுபட்டுள்ளது. ஆனால், வேறு மொழியினரை எதிர்க்கும் அரசியலை மட்டுமே அவர்கள் செய்வதுபோல் தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. நாம் தமிழரின் தேர்தல் அறிக்கை நம்பிக்கையூட்டுவதாகவும், புதிய யோசனைகள் கொண்டதாகவும் உள்ளது. தங்கள் முன்புள்ள தடைகளை தாண்டினால், நாம் தமிழர் கணிசமான வாக்குகளை பெறும்.
வீழ்ந்து எழும் கேப்டன்
திமுக, அதிமுகவை பார்த்து வெறுத்துப்போன மக்கள்தான் தேமுதிகவை மாற்று சக்தியாக உருவாக்கும் அளவுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்தனர். ஆனால் கூட்டணி எனும், திராவிட கட்சிகளின் மாய வலைக்குள் விஜயகாந்த் சிக்கிய பிறகு, அவரது செல்வாக்கு சரிந்தது. ஆனால், மக்கள் பிரச்சினைகளில், கேப்டன் அசால்ட்டாக முன்வந்து நின்று உதவும் குணம் அவரது செல்வாக்கை ஓரளவுக்கு மீட்க தொடங்கியுள்ளது. வாக்குகளை சிதறடிப்பதில் தேமுதிக முக்கிய பங்காற்ற வாய்ப்புள்ளது.
முதல்வர் வேட்பாளர் சிக்கல்
மக்கள் நலக் கூட்டணியில், வைகோ, திருமாவளவன், இடது சாரிகள் உள்ளனர். இதில் யாரை முதல்வர் வேட்பாளராக்குவது என்ற குழப்பம் நீடிக்கிறது. தமிழக நலனில் வைகோவின் போராட்டங்களும், அரசியலும் மிகப் பெரும்பங்காற்றியுள்ளது. மக்கள் அவரை அதிகார மையத்திற்கு கொண்டு செல்ல வாக்களிக்காவிட்டாலும், அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு பிரச்னைக்கும் முன்னின்று போராட்டங்களும், சட்டப் போராட்டங்களும் செய்துள்ளார்.
சகாயம் வருவாரா?
வைகோவுடன் இணைந்துள்ள திருமாவளவன், தாழ்த்தப்பட்டோரின் ஆதரவை பெற்ற தலைவர். தமிழக நலன்களில் இடது சாரிகளின் போராட்டங்கள் முக்கியமானவை. ஈழப்பிரச்சினையில்தான் அவர்கள் தேசிய கட்சி போல செயல்படுகிறார்கள். இந்த கூட்டணி சகாயம் போன்ற ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால், அது பெரும் பலனை கொடுக்கும் வாய்ப்புள்ளது.
சகாயத்தால் நன்மைகள்
வைகோ, திருமாவளவன் போன்றோரில் யாருக்கு முதல்வர் பதவி அளிப்பது என்ற ஈகோ பிரச்சினை எழாமலும் இருக்கும், கூட்டு தலைமை என்பதால் மக்கள் புறக்கணித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்து விடுபட்டதாகவும் இருக்கும்.
ஐஏஎஸ் நிர்வாகம்
நிர்வாக திறமையில் பெயர் பெற்றவர் என்று அதிமுகவினரால் புகழப்படும் ஜெயலலிதாவின் ஆட்சியில் கூட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய பணியிடங்களில் ஆலோசகர்களாக உள்ளனர். எனவே, மக்கள் நல கூட்டணியும், சகாயம் போன்ற ஐஏஎஸ் அதிகாரியையே முதல்வராக நியமித்தால், கொள்கை, கோட்பாடு, வாக்குவங்கி போன்றவற்றை கருத்தில்கொள்ளாமல், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உடனுக்குடன் கொண்டுவர முடியும். தமிழகம் பெரும் மாற்றத்தை அடையும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.
முதல்வன் பட பாணி
சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, மக்கள் நல கூட்டணி கட்சிகள் அமைச்சரவையை பங்கிட்டுக்கொள்ளலாம். ஏனைய சில கட்சிகளும் இதில் இணையலாம். அப்படி நடந்தால் முதல்வன் திரைப்பட அர்ஜுன் கதாப்பாத்திரம் சகாயம் வடிவத்தில் மக்கள் கண்முன் வந்துபோகும். ஏற்கனவே சகாயத்தை அரசியலுக்கு வரச்சொல்லி முதல்வன் பட பாணியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.