அனைவருக்கும் சமநிலை என்பதே ம.ந.கூட்டணியின் இலக்கு: சீதாராம் யெச்சூரி
சென்னை: அனைவருக்கும் சமநிலை என்பதே மக்கள் நலக் கூட்டணியின் இலக்கு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னையில் நடைபெறும் அம்பேத்காரின் 125 வது பிறந்தநாள் விழா கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் அனைவருக்கும் சமநிலையை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே மக்கள் நலக் கூட்டணியின் இலக்கு என்றும் அதற்காகவே இந்த கூட்டணி உருவாகியுள்ளது எனக் கூறினார்.
முன்னதாக நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும். தமிழகத்தில் நீண்ட காலத்துக்கு பின் அரசியல் மாற்றத்துக்கான கூட்டணியாக மக்கள் நல கூட்டணி அமைந்து உள்ளது. இந்த கூட்டணியில் விஜயகாந்த் இணைந்து உள்ளது நல்ல விஷயம்.
அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக முதன்முறையாக இந்த கூட்டணி ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் தமிழகத்துக்கு மட்டும் இன்றி நாட்டுக்கே நல்லதாக இருக்கும். தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளன. தேர்தல் பிரசாரத்தில் நான் உள்பட கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.