சென்னைப் புறநகரில் கதறும் உதவிக்குரல்... தலைபிய்த்துக் கொள்ளும் அதிகாரிகள்.. இது தான் முன் ஏற்பாடா?
சென்னையில் முடிச்சூர், தாம்பரம், மடிப்பாக்கம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளதால் மக்கள் உதவிக்குரல் கேட்டு கதறி வருகின்றனர்.
சென்னை : வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருந்த புறநகர்ப் பகுதிகள் மேலும் நீரில் மிதக்கின்றன. இதனால் மக்கள் உதவிக்குரல் கேட்டு கதறி வருகின்றனர்.
வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தை ஒரு கை பார்த்துவிட்டுப் போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டதோ என்னவோ தெரியவில்லை. தொடக்கமே அதகளமாக இருக்கிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக சராசரி அளவிற்குக் கூட மழை இல்லாவிட்டாலும். நேற்று இரவு புரட்டிப் போட்ட மழை இயல்பை விட அதிகம்.
சென்னை மெரினாவில் 30 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 18 செ.மீ, தரமணியில் 19 செ.மீ, சோழிங்கநல்லூரில் 20 செ.மீ, சத்யபாமா கல்லூரி அமைந்துள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் 20 செ.மீ என்று மழை பின்னி பெடலை எடுத்துள்ளது. 18 செ.மீட்டர் மழை என்பது மலைப்பகுதியில் பெய்திருந்தால் மண் மற்றும் பாறை சரிவுகளை ஏற்படுத்தி இருக்கும்.
முடிச்சூர், தாம்பரத்தை சூழ்ந்த மழைநீர்
மேகத்தை வெடித்து கொட்டுவது போல கொட்டித் தீர்த்த இந்த மழையால் ஏற்கனவே தனித்தீவுகள் போல ஆன புறநகர்ப் பகுதிகள் மேலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் தாம்பரம், முடிச்சூர் பிரதான சாலையிலேயே முட்டிக்கால் அளவிற்குமழைநீர் தேங்கியுள்ளது. குடியிருப்புகளை பொறுத்தவரையில் கீழ்த்தளங்களிலேயே இடுப்பளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.
புறநகரையும் பாருங்கள்
மழை நீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்திருக்கிறது. இதே போன்று கோவிலம்பாக்கம் பகுதியில் அருகில் இருந்த ஏரியில் வெளியேறும் நீரானது குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்துள்ளது. சென்னை நகர்ப்பகுதிகளில் மட்டுமே அதிகாரிகள் மழைநீரை வெளியேற்றும் பணிகளைச் செய்வதாகவும், இது குறித்து புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கதறுகின்றனர்.
நடவடிக்கை இல்லை என குமுறும் மக்கள்
சென்னை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்காக தனித்தனி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை நீர் தேங்கியதால் நகர மக்கள் அதிக அளவில் பாதிக்காத நிலையில் அதிகாரிகள் குழு புறநகர்ப் பகுதியை கண்டுகொள்ளவே இல்லை. மேலும் உதவிக்காக அளிக்கப்பட்டுள்ள உதவி எண்களும் பல முறை முயற்சித்த பின்னரே பதில் கிடைப்பதாக எந்த அதிகாரியோ, மாநகராட்சி ஊழியர்களோ வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடும் ஆத்திரத்தில் உள்ளனர் மக்கள்.
எப்படி வெளியேற்றுவது?
மக்கள் தொடர்ந்து உதவி கேட்டு அழைத்த வண்ணம் இருப்பதால் அதிகாரிகள் செய்வதறியாது திணறிப் போயுள்ளன. ஏனெனில் தேங்கி நிற்கும் மழை நீரை எங்கே வெளியேற்றுவது என்பது தான் அந்தப் பகுதிகளில் இருக்கும் ஒரு சவாலான விஷயம். இதனால் வருவதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டிக்கும் அதிகாரிகள், நீரை வெளியேற்ற வாய்ப்பிருக்கும் பகுதிகளுக்கு மட்டுமே ஊழியர்கள் சென்று உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கை இது தானா?
எனினும் மழைக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக மார் தட்டிக் கொண்ட அரசு செய்த முன் ஏற்பாடு என்ன என்பது தான் மக்களின் கேள்வியாக உள்ளது. மழை வந்ததும், அதனை சரி செய்ய தயார் நிலையில் இருக்கும் ஊழியர்களைக் கொண்டு முன்கூட்டியே மழை நீர் செல்வதற்கான பாதைகளை ஏற்படுத்தி இருக்கலாமே என்று மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.