தமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல்.. தவாக கண்டனம்
தமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல் என்று தவாக கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையிலேயே தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தவாக கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் மீது நேற்று தஞ்சாவூரில் அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து உள்ளனர். இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
மணியரசன் மீது தாக்குதல்
அந்த அறிக்கையில், நேற்று இரவு 8.30 மணியளவில் தஞ்சை கலைஞர் நகரிலுள்ள தன் இல்லத்திலிருந்து சென்னை செல்வதற்காக இயக்கத் தோழருடன் பைக்கில் பின்னால் அமர்ந்தபடி ரயில் நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து இருவர் பைக்கில் வந்திருக்கின்றனர். அடையாளம் தெரியாத அந்த நபர்களில் ஒருவர் மணியரசன் பைக்கை காலால் எட்டி உதைக்க, இன்னொருவர் மணியரசனைத் தாக்கி கீழே தள்ளியிருக்கிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதைப் பார்த்த பொதுமக்கள் ஓடிவரவே, அந்த மர்ம நபர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் இடத்தைக் காலிசெய்திருக்கின்றனர். இதில் கை, கால்களில் பலமாக அடிபட்டு காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார் மணியரசன். இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் தமிழ் மண்ணின் உரிமை-நலன்களுக்கு எதிரானவர்கள்தான் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. தமிழ் மண்ணின் உரிமை-நலன்களுக்காகப் போராடுபவர்களை முடக்கும் திட்டப்படிதான் ஐயா மணியரசன் தாக்கப்பட்டிருக்கிறார் என்பதிலும் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.
அறிவிக்கப்படாத அவசர நிலை
இந்த பாசிச அடக்குமுறைத் திட்டப்படிதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் பொய்வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் கடல்தீபனும் இதுபோல் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தை முடக்க முயற்சி
மேலும் ஸ்டெர்லைட் போராட்டக்குழுத் தலைவர் மகேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியை தேர்ந்த இசக்கிதுரையையும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் பிடித்துச் சென்றுள்ளனர். ஐயா பெ.மணியரசன் அவர்களை கொலை செய்யவே முயற்சி நடந்துள்ளது.
இதையெல்லாம் பார்க்கும்போது, அறிவிக்கப்படாத ஓர் அவசர நிலை தமிழ்நாட்டில் அமல் செய்யப்பட்டிருப்பதையே உணர முடிகிறது.இதனாலெல்லாம் தமிழ் மண்ணின் உரிமை-நலன்களை முடக்கிவிட முடியாது; அதற்கான போராட்டத்தில் அலை அலையாய் மக்கள் எழுவர்; எதிரிகளின் கனவைத் தகர்ப்பர் என்றே அவர்களுக்கு எச்ச்ரிக்கை விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
தமிழ் மண்ணின் உரிமை-நலன்களுக்காகப் போராடும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இத்தாக்குதலைத் தொடுத்த அக்குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.