மர்ம மரணங்கள் நிறைந்த கருணை இல்லம்.. முதியவர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை!
காஞ்சிபுரம் அருகே சர்ச்சைக்குள்ளான கருணை இல்லத்தில் விருப்பமின்றி தங்கியுள்ள முதியவர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
காஞ்சிபுரம்: சர்ச்சைக்குள்ளான கருணை இல்லத்தில் விருப்பமின்றி தங்கியுள்ள முதியவர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயின்ட் ஜோசப் கருணை இல்லம் இயங்கி வருகிறது. இந்த கருணை இல்லம் கடந்த ஒரு வாரமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறது.
கருணை இல்லத்துக்கு சொந்தமான போலி ஆம்புலன்ஸ் ஒன்றில் கடந்த வாரம் செங்கல்பட்டு அருகே மூதாட்டி ஒருவர் கடத்தப்பட்டார். ஆம்புலன்ஸ்க்குள் சடலம் இன்று இருப்பதை பார்த்த அவர் காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்.
300 பேர் பலி
இதையடுத்து கிராமமக்கள் அந்த ஆம்புலன்ஸை மடக்கிப்பிடித்து போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடந்த 3 மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
எலும்புகள் கடத்தல்
மேலும் உயிரிழந்தவர்களின் உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புக்கூடுகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அங்கு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
கடத்திசெல்லப்பட்டு அடைப்பு
மேலும் மத்திய உளவுத்துறையினரும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் சாலையோரத்தில் படுத்திருந்தபோது கடத்தி கொண்டுவரப்பட்டு அடைத்து வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கருணை இல்லத்துக்கு நோட்டிஸ் அனுப்பியது. இந்நிலையில் கருணை இல்லத்தில் விருப்பமின்றி தங்கியுள்ளவர்களை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசு காப்பகங்களில்..
கருணை இல்லத்தில் விருப்பமில்லாமல் தங்க வைக்கப்பட்டிருக்கும் முதியவர்களை அங்கீகாரம் பெற்ற அரசு காப்பகங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.