குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைத்தால் சசியை மக்கள் விரட்டியடிப்பார்கள்.. அதிமுக எம்.பிக்கள்!
தம்பிதுரையை தவிர அனைத்து எம்பிக்களுக்கும் ஓபிஎஸ்சை ஆதரிப்பார்கள் என நாமக்கல் எம்.பி சுந்தரம் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாமக்கல் எம்பி சுந்தரம், கிருஷ்ணகிரி எம்பி அசோக் குமார் ஆகியோர் இன்று ஆதரவு தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரநினைப்பவர்களை மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஓபிஎஸ்க்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. நாமக்கல் எம்பி சுந்தரம், கிருஷ்ணகிரி எம்பி அசோக் குமார் ஆகியோர் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பி.எஸ் வீட்டுக்கு நேரில் சென்று தனது ஆதரவுகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுந்தரம் எம்.பி ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவில்லமாக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் தம்பிதுரையை தவிர அனைத்து எம்பிக்களுக்கும் ஓபிஎஸ்சை ஆதரிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை எங்களை யாரையும் பார்க்க விடவில்லை என்று கூறி கலங்கினார்.
தொடர்ந்து பேசிய எம்பி அசோக்குமார், முதல்வர் பன்னீர்செல்வத்திடம் என்ன குறை கண்டார்கள், ஏன் மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் குறுக்கு வழியில் முதல்வராக வர முயற்சிப்போருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எம்எல்ஏக்கள் மட்டுமல்ல எம்பிக்களின் ஆதரவும் பெருகி வருவதால் சசிகலா தரப்பு ஆட்டம் கண்டுள்ளது. உடனடியாக போயஸ்கார்டனுக்கு விரைந்த செங்கோட்டையன், சசிகலா உடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.