ஸ்டெர்லைட் ஆலை இனியும் செயல்பட்டால் மக்கள் அதனை அடித்து நொறுக்குவார்கள்: வைகோ
ஸ்டெர்லைட் ஆலை இனியும் செயல்பட்டால் மக்கள் அதனை அடித்து நொறுக்குவார்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி : 12 அப்பாவி உயிர்களை பலிவாங்கிய பிறகும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட்டால், மக்களால் அது அடித்து நொறுக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். இதனால் தமிழகத்தில் மிகுந்த கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு, அரசியல் கட்சித் தலைவர்களும் மாணவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ. போராட்டத்தில் இருந்த மக்கள் யாரும் வன்முறையை கையாளவில்லை. போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையினரே போலீஸ் வாகனங்களைத் தாக்கி சூறையாடி உள்ளனர்.
எந்தத் தவறும் செய்யாத அப்பாவி மக்களை துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்துள்ளது காவல்துறை. மக்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றால் ஏன் ஒரு போலீஸ் கூட உயிரிழக்கவில்லை .
இது திட்டமிட்ட சதி. இதற்கு காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும். மக்களைக் கொன்ற காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இனியும் ஸ்டெர்லைட் ஆலை இங்கு செயல்பட மக்கள் விடமாட்டார்கள், அதனை அடித்து நொறுக்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.