கொல்லைப்புறம் வழியாக வரும் சசிகலாவுக்கு முதல்வராகும் தகுதி இல்லை: ஈ.வி.கே.எஸ். பொளேர் !
தமிழக முதல்வராக சசிகலா வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி: ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே முதல்வராக வரவேண்டும் எனவும் கொல்லைப்புறம் வழியாக வரும் சசிகலாவுக்கு தமிழக முதல்வராகும் தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதார். இதனிடையே சசிகலா முதல்வர் ஆவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வராக சசிகலா வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை. அ.தி.மு.க.வில் பதவியில் உள்ளவர்கள் மட்டுமே விரும்புகிறார்கள்.
கிராமங்களில் சசிகலாவுக்கே பேனர்கள் இல்லை. ஆனால் தீபாவுக்கு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு உள்ளது. ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே முதல்வராக வரவேண்டும். அ.தி.மு.க. துக்க வீடு மாதிரி உள்ளது. தொண்டர்களிடம் ஆதரவு இல்லை. கொல்லைப்புறம் வழியாக வரும் இவர்களுக்கு முதல்வராகும் தகுதி இல்லை.
அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களும், தமிழக மக்களும் சசிகலாவை முதல்வராக ஏற்க மாட்டார்கள். சசிகலா முதல்வராக வருவதை தமிழக ஆளுநர் ஏற்றுக் கொள்வாரா? என்பது சந்தேகம் தான். வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும். உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.