பாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்
பாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் என்று தமிழிசை குறிப்பிட்டு உள்ளார் .
சென்னை : பாஜகவை மனதில் வைத்து தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என்று ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்து இருக்கமாட்டார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
சென்னை வேப்பேரியில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அவர்களால் இங்கு எந்த காலத்திலும் காலூன்ற முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாரை மனதில் வைத்து பேசினார் என்று தெரியவில்லை.
ஆனால் நிச்சயமாக பாஜகவை மனதில் வைத்து அவர் அப்படி விமர்சித்து இருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை மனதில் வைத்து கூட அவ்வாறு பேசி இருக்கலாம். தெளிவாக சொன்னால்தான் எதுவும் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் பலரும் பாஜக இங்கு காலூன்ற முடியாது என்கிற கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். காலூன்றவே முடியாத ஒரு கட்சியை பற்றி அவர்கள் ஏன் பேச வேண்டும்? தொடர்ந்து வெளியில் இப்படி பேசி வந்தாலும் உள்ளுக்குள் பாஜக குறித்த பயம் இருப்பதே அதற்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.
தற்சமயம் பாஜக எந்த கூட்டணியிலும் இல்லை என்றும், யாருடனும் கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வில் பாஜக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்றும் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டு உள்ளார்.