தரக்குறைவாக பேசிய வங்கி ஊழியர்கள்... முதல்வருக்கு மக்கள் காட்டமான கடிதம்!
வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக ஒருமையில் பேசிய வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது
நெல்லை: வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக ஒருமையில் பேசிய வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகாவில் ஐ.ஒ.பி வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் பணம் எடுப்பதற்காக தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள், மாற்று திறனாளிகள், முதியோர்கள் உள்ளிட்டோர் வந்து செல்வது வழக்கம்.
பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களிடம் வங்கி ஊழியர்கள் தரக்குறைவாக ஒருமையில் நா கூசும் வார்தைகளால் பேசி வருவதாக புகார் எழுந்துள்ளது. வங்கி மேலாளரின் மோசமான செயலால்தான் விவசாயிகள் சங்கத் தலைவர் வேம்பு கிருஷ்ணன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் மானூர் ஒன்றியத்தில் உள்ள குறிச்சிகுளத்தைச் சேர்ந்த மக்கள், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தின் விவரம் :
ஸ்மார்ட் கார்ட் வைத்து பணம் எடுக்கும் போது ,சில சமயங்களில் கைரேகை சரியாக விழாத காரணத்தால் வங்கிக்கு நேரடியாக சென்று வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கின்றனர். ஆனால் அவர்களிடம் வங்கி ஊழியர்கள் தரக்குறைவாக நடந்து வருவது தொடர் கதையாயிற்று. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இதற்கு காரணமான மானூர் ஐ.ஒ.பி வங்கி மேலாளர், பணம் பட்டுவாட செய்யும் கேஷியர் சுந்தரம்பிள்ளை மற்றும் ஆபிஸ் பாய் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
வங்கி ஊழியர்களுக்கு எதிராக ஊர் மக்களே ஒன்றினைந்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.