கருணாநிதிக்காக இரவும் பகலும் விம்மியழும் தொண்டர்கள்.. மெரீனா காற்றை கிழித்து செல்லும் சோகம்!
கருணாநிதி சமாதியில் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை: மெரினா கடற்கரை காற்றின் வழியே ஒப்பாரி அழுகையும், விசும்பலும் தொடர்ந்து கேட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி இறந்து 4 நாள் ஆனபோதும் கூட அவரது சமாதிக்கு செல்லும் தொண்டர்கள், பொதுமக்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. எங்கெங்கிருந்தோ கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். கையில் குழந்தை குட்டிகள் வேறு. அவ்வப்போது மழை பெய்தும் வருகிறது. பீச்சில் மழை வந்தால் ஒதுங்க கூட இடம் கிடையாது.
பீச்சில் காலடி வைத்ததுமே அழுகை சத்தம் கேட்க தொடங்குகிறது. கிட்டே சென்று சமாதியை பார்க்க முடியவில்லை. தடுப்பு வேலி போட்டுள்ளதால் தூரமாக நின்றே சமாதியையும், அங்கே சிரித்தபடி வைக்கப்பட்டுள்ள கருணாநிதி போட்டோவையும் பொதுமக்கள் பார்த்து கதறுகிறார்கள்.
7 மணிக்குத்தான் சமாதியை பார்க்க அனுமதிக்கப்பட்டாலும், விடியற்காலை 4 மணிக்கே வந்து மக்கள் நின்று காத்து கொண்டிருக்கிறார்கள். அந்த விடிகாலை நேரத்திலேயே கூட்டமும் நிரம்ப ஆரம்பித்து விடுகிறது. சமாதியை நெருங்கியதுமே ஐயா... தலைவரே... அப்பா... என்று பலவித உறவுகளை அழைத்து பெண்கள் விசும்ப தொடங்குகிறார்கள். அதில் பெரும்பாலும் அப்பா எங்களை விட்டு போய்ட்டீங்களே... என்ற அழுகை குரல்தான் அதிகமாக கேட்கிறது.
அதிலும் குழந்தைகளும், மாணவர்களும் கருணாநிதி மேல் அளவு கடந்த பிரியம் வைத்துள்ளது, அவர்கள் மண்டியிட்டு அஞ்சலி செலுத்தியபோது காண முடிந்தது. பொதுமக்களின் கண்ணீருடன் "நானும்தான் இருக்கிறேன் அப்பா" என்று சமாதி மேல் காற்றில் படபடத்து தன் இருப்பிடத்தை காட்டி வருகிறது இன்றைய 'முரசொலி' நாளிதழ்.