பெப்சிக்கும் கோக்குக்கும் தாரை வார்க்கப்பட்ட தாமிரபரணி!
நெல்லை: பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டதால் வற்றாத ஜீவநிதியான தாமிரபரணியில் நீர் வரத்து குறைந்து 60 லட்சம் மக்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இந்த ஆலைகளுக்கு தரப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் சிறப்புப் பெற்ற (தமிழகத்துக்குள்ளேயே) தாமிரபரணி நதி ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவ நதியாகும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் தாமிர பரணியை முடிந்த அளவுக்கு சீரழித்து வருகின்றனர் மக்களும், தொழிற்சாலைகளும்.
இந்த நிலையில் இந்த நதியை முற்றாக உறிஞ்சிக் குடிக்கும் வகையில் பெப்சி, கோக் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நாளொன்றுக்கு 57 லட்சம் லிட்டர் தண்ணீரை தாமிரபரணி நதியிலிருந்து உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன இந்த பகாசுர ஆலைகள்.
இவற்றில் பெப்சிக்கும் கோக்குக்கும் மட்டுமே 24 லட்சம் லிட்டர் தண்ணீர் போகிறது.
இப்படி உறிஞ்சி எடுக்கும் தண்ணீருக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஆயிரம் லிட்டருக்கு ரூ 37. ஆனால் பெப்சியும் கோக்கும் ஒரு பாட்டில் தண்ணீரை ரூ 20-க்கு விற்கின்றன (1 லிட்டர்).
பெப்சி, கோக் நிறுவனங்கள் தண்ணீரை உறிஞ்ச வசதியாக சீவலப்பேரியில் ரூ 11 கோடியில் தடுப்பணை ஒன்றையே கட்டியுள்ளது தமிழக அரசு. இங்கே பாலாற்றில் பழைய சீவரம் அருகே ஒரு தடுப்பணை கட்டுமாறு பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். அதைக் கண்டு கொள்ளவே இல்லை அரசு. ஆனால் தனியார் ஆலைகளுக்கு தண்ணீர் உறிஞ்ச வசதியாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
இப்படி உறிஞ்சப்படுவதால் நெல்லை, தூத்துக்குடி மக்களின் விவசாயமே பட்டுப் போய்விட்டது. முப்போகம் விளைந்த இந்த மண்ணில் இப்போது ஒரு போகம் பார்ப்பதே பெரிய விஷயமாகிவிட்டது.
கோக், பெப்சி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், தாமிரவருணி பாதுகாப்பு இயக்கங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. கடந்த அக்டோபரில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இருப்பினும், பெரிய அளவில் எந்தப் போராட்டத்தையும் பிரதான அரசியல் கட்சிகள் முன்னெடுக்காமல் உள்ளன.
விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாவட்ட மக்கள் என அத்தனைப் பேரையும் ஒருங்கிணைத்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சிகளில் சிலர் இறங்கியுள்ளனர்.