விஷமுள்ள கோக், பெப்சியை குடிக்க வேண்டாம்.. பொதுமக்களுக்கு விக்ரமராஜா கோரிக்கை
நச்சு நிறைந்த குளிர்பானங்களான கோக் மற்றும் பெப்சியை வாங்க மாட்டோம் என்று பொதுமக்கள் சத்திய பிரமாணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா கோரியுள்ளார்.
சென்னை: வரும் 1ம் தேதியில் இருந்து கடைகளில் கோக் மற்றும் பெப்சி கிடைக்காது. கடைகாரர்கள் விற்க மாட்டார்கள். இந்த குளிர்பானங்களை வேறு எங்கும் வாங்கி குடிக்க மாட்டோம் என்று பொதுமக்கள் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா கோரியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் புரட்சிகரமாக நடத்திய போது, கோக் மற்றும் பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை அருந்துவதில்லை என்று முடிவு செய்து அறிவித்தனர்.
இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மார்ச் 1ம் தேதியில் இருந்து பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்று விக்ரமராஜா அறிவித்தார். விற்பனையை நிறுத்த இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் விக்ரமராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
குடிக்க மாட்டோம்..
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையொட்டி எடுக்கப்பட்ட பெப்சி, கோக் குளிர்பானங்களை விற்பதில்லை என்ற முடிவு மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி. எனவே, விஷத்தன்மை கொண்ட இந்த குளிர்பானங்களை பொதுமக்கள் வாங்குவதில்லை என்ற சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நஷ்டமானால் பரவாயில்லை
பெப்சி, கோக் குளிர்பான விற்பனையை நிறுத்திவிட்டால் வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். இருந்தாலும் பரவாயில்லை. மக்கள் உடல் நலத்திலும், ஆரோக்கியத்திலும் நாங்கள் கவனம் கொண்டு இந்த விற்பனையை நிறுத்த உள்ளோம்.
உள்நாட்டு குளிர்பானம்
தற்போது உள்நாட்டு குளிர்பானம் தயாரிக்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. குறிப்பாக வடமாநில நிறுவனங்கள் பல தமிழ்நாட்டு வணிகர் சங்கங்களை அணுகிக் கொண்டிருக்கின்றன. அவர்களிடம், தரமான குளிர்பானத்தை கொடுத்தால் விற்போம் என்று சொல்லி இருக்கிறோம். அதே போன்று ஆய்வு தகவல்களை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கிறோம்.
பதநீர்
வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை நிறுத்தும் அதே வேளையில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கடைகளிலும் பதநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இனி, வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையான பதநீரை அருந்த மக்கள் முன் வர வேண்டும்.
70% விற்பனை குறைவு
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பெப்சி, கோக்கை கையில் தொட மாட்டோம் என்று இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள், அறிவித்த பின்னர், வணிகர் சங்கம் மார்ச் 1ம் தேதியில் இருந்து வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்று அறிவித்தது. இதனால் 70 சதவீதம் வெளிநாட்டு குளிர்பான விற்பனை குறைந்துள்ளது என்று விக்ரமராஜா கூறியுள்ளார்.