மின்னல் கீற்றாய் மக்களின் சிந்தனையில் ஒளி பாய்ச்சிய அண்ணா!
பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்த நாளை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: தந்தை பெரியாரின் தளபதி.. திராவிட இயக்கத்தின் தலைவர்.. அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று.
காஞ்சியில் ஒரு எளிய குடும்பத்தில் உதித்த இந்த விடிவெள்ளிக்கு பெரிதும் கைகொடுத்தது கல்வியே. அக்காலத்திலேயே எம்ஏ பட்டம் பெற்ற அண்ணாவிற்கு இயற்கையிலேயே இரண்டு தன்மைகள் இருந்தன.
ஒன்று மூடநம்பிக்கை, பழமைவாதம், சாதிய கொடுமை போன்றவற்றுக்கு எதிரான உணர்வு. இரண்டாவதாக, கலை இலக்கியங்கள் மீது அவருக்கு இருந்த அளவற்ற பற்றும் ஈடுபாடும். இந்த உயர்கல்வியும், முற்போக்கு சிந்தனையும், கலைகளுடன் கைகோர்த்து நின்றபோது புதுமைமிக்க படைப்பாளராக அவர் மகிழ்ந்தார்.
பெரியாரை ஏற்றார்
தனது சிந்தனையை வெளிப்படுத்த ஒரு களம் அவருக்கு தேவையாயிருந்தது. அதை முறைப்படுத்தி - நெறிப்படுத்த ஒரு தலைமையும் அவருக்கு தேவையாயிருந்தது. ஈரோட்டில் குமுறி வெடித்த தந்தை பெரியார் என்ற எரிமலையின் தீ ஜூவாலைகளின் ஒளியை அண்ணா தரிசிக்க நேர்ந்தது. தந்தை பெரியாரை தனக்குரிய தலைவராகவும் தேடிக் கொண்டார். திராவிடர் கழகம் என்ற அற்புதமான களமும் கிடைத்து விட்டது.
இடிமுழக்க வசனங்கள்
கலை உணர்வையும், பகுத்தறிவு சிந்தனையையும் இழைத்து நாடகங்களை எழுதினார், அவரே அரங்கேற்றினார். அவரே நடிக்கவும் செய்தார். அண்ணா என்ற இந்த அகல்விளக்கு நூற்றுக்கணக்கான அகல் விளக்குகளை தமிழ்த்திரை உலகில் ஏற்றி வைத்தது. இடிமுழக்கம் போல ஒலித்த அனல் கக்கும் வசனங்கள் மக்களை மலைக்க வைத்தது. மின்னல் கீற்றாய் மக்களின் சிந்தனையில் ஒளியை பாய்ச்சியது.
உழைப்பும் பணியும்
1949-ல் திமுகவை துவக்கி வழிநடத்த வேண்டிய பொறுப்பு அண்ணாவுக்கு வந்து சேர்ந்தது. புதிய கட்சியை தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சுமையை அவர் ஏற்றார். தன்னை பின்பற்றிய எண்ணற்ற இளைஞர்களை பகுத்தறிவு பாசறையில் பயிற்றுவிக்க வேண்டிய ஆசானாகவும் அண்ணா திகழ்ந்தார். 1957-க்கு பிறகு தேர்தலில் போட்டியிடும் முடிவை திமுக மேற்கொண்டதால் அவரது உழைப்பும் பணியும் மேலும் பல மடங்கு அரசியலுக்கு தேவைப்பட்டது.
எழுச்சி நாயகன்
தமிழ் கூறும் நல்லுலகின் தனிப்பெரும் தலைவர். தமிழை தாலாட்டி சீராட்டி வளர்த்த தவப்புதல்வர். ஆங்கிலத்திலும் தமிழிலும் அசத்திய புலமை பெற்றவர். அடுக்கு மொழியில் தமிழை பேசி தாய் மொழிக்கு புதிய பரிணாமத்தை அளித்தவர். கலை, இலக்கியம், நாடகம் மட்டுமின்றி திரைப்படத்துறையிலும் புயலாக பிரவேசித்தவர். இளைய தலைமுறையின் எழுச்சி நாயகனாக தோன்றியவர். தந்தை பெரியாரின் தளபதியாய் விளங்கி திராவிட இயக்கத்தின் தலைவராய் உயர்ந்தவர்.
விடிவெள்ளியாய் முளைத்தார்
இவர் இயக்கி வைத்த அரசியல் இயக்கம் மகத்தான சாதனைகளை நிகழ்த்தி இன்றும் வரலாறு படைத்து கொண்டிருக்கிறது. தமிகத்தை 50 ஆண்டுகாலமாக கோலோச்சும் மாபெரும் பெருமை படைத்த திராவிட இயக்கத்தின் பிதாமகன்தான் அண்ணா. திரையுலகில் பகுத்தறிவு காற்றோ, சுயமரியாதை மூச்சோ இல்லாமல் தமிழகம் திணறிய போது விடிவெள்ளியாய் முளைத்தவர் அண்ணா.
ஊழலற்ற அரசு
பத்திரிகையாளராக - படைப்பாளராக - சிறுதை மற்றும் நாடக ஆசிரியராக - நடிகராக - திரைப்பட கதை, வசனகர்த்தாவாக பன்முக ஆளுமையை கொண்டவர் அண்ணா. மேடைப் பேச்சில் புரட்சி செய்து லட்சக்கணக்கான மக்களை தன் நாவன்மையால் கட்டிப்போட்டார். இவர் ஆட்சியில் இருந்த காலம் குறைவு! ஆனால் அவரது நிர்வாகமோ நிறைவு!! அவரது ஊழலற்ற தூய்மையான ஆட்சி தமிழக மக்களுக்கு தொடர்ந்து கிடைக்காமல் போனது உண்மையில் துரதிர்ஷ்டமே!!