சத்துணவில் அழுகிய முட்டையில்லை... கமல் புகாருக்கு பெரம்பலூர் ஆட்சியர் மறுப்பு
பெரம்பலூரில் சத்துணவுக் கூடங்களில் அழுகிய முட்டை வழங்கப்படவில்லை என்று ஆட்சியர் சாந்தா கூறியுள்ளார்.
பெரம்பலூர்: சத்துணவு கூடங்களில் அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா கூறியுள்ளார்.
கமல் ரசிகர்கள் அளித்த புகாரை அடுத்து பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய ஊர்களில் சத்துணவுக் கூடங்களில் அழுகிய முட்டை உள்ளதா என்று மாவட்ட ஆட்சியர் சாந்தா ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து அழுகிய முட்டைகள் அளிக்கப்படவில்லை என்று ஆட்சியர் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கமல் நற்பணி மன்றத்தினர் ஜூலை 24ஆம் தேதி சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதை கண்டு பிடித்துள்ளனர்.
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் கமல் ரசிகர் மன்றத்தினர் ஆய்வு மேற்கொண்டு, அழுகிய முட்டை வழங்கப்படுவதை அம்பலப்படுத்தினர். அழுகிய முட்டை வழங்கப்படுவது குறித்து பெரம்பலூர் மாவட்ட கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர் முத்துக்குமார் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்ட கமல், முட்டை ஊழலை வெளிக்கொண்டு வந்த ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் சட்ட மீறல் இல்லாமல் வழக்கறிஞர்கள் ஆலோசனைப்படி செயல்படவும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பெரம்பலூரில் சத்துணவுக் கூடங்களில் அழுகிய முட்டை உள்ளதா என்று ஆட்சியர் சாந்தா ஆய்வு மேற்கொண்டார். ரசிகர் மன்றத்தினர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாந்தா, மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் கொடுக்கப்படவில்லை என்று கூறினார்.