பெரம்பலூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 60 மாணவர்கள் காயம்– டிரைவர் கைது
பெரம்பலூரில் இன்று காலையில் புதிய பேருந்து நிலையம் அருகே 120 பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 63 மாணவர்கள் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்திற்குக் காரணமான டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரையில் தனலெட்சுமி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சேரலி, கல்பாடி, மருவத்தூர், ஏரையூர், அகரம்சிகூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கவிழ்ந்த பேருந்து
இன்று காலையில் இந்த பகுதிகளில் இருந்து 120 மாணவ- மாணவிகளை பள்ளி பேருந்து ஒன்று ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றது. பேருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாலக்கரை என்ற பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 63 மாணவ-மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர்.
மாணவர்கள் மீட்பு
நடுரோட்டில் பேருந்து கவிழ்ந்து கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் விரைந்து வந்து மாணவர்களை மீட்டுள்ளனர். அப்போது, பேருந்தில் அவசர வழி கதவு திறக்கப்படவே இல்லை. கடைசி வரை போராடி திறக்காததால் கதவை பொதுமக்கள் உடைத்து மாணவர்களை மீட்டுள்ளனர்.
டிரைவர் கைது
காயம் அடைந்த மாணவ-மாணவிகள் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுனர் ராஜாதி ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆட்சியர் உத்தரவு
இதையடுத்து அங்கு வந்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மீனாட்சி காயம் அடைந்த மாணவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் விபத்து குறித்தும், பேருந்து பராமரிப்பு குறித்தும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
பெற்றோர்கள் குற்றச்சாட்டு
விபத்து குறித்து கேள்விப்பட்ட உடன் பெற்றோர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். பேருந்து முறையாக பராமரிக்கப்படாததே விபத்துக்குக் காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்றும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
தலைமை ஆசிரியர் மறுப்பு
ஒரு பேருந்தில் 60 பேர் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது ஆனால் 127 மாணவர்களை ஏற்றிச்சென்றதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விபத்து குறித்து கருத்து கூறிய பள்ளி தலைமை ஆசிரியர், இது முதல் முறையாக ஏற்பட்ட விபத்து என்றும், 63 பேர் மட்டுமே மாணவர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டிருந்தனர் என்றும் விளக்கம் அளித்துள்ளார். பேருந்து ஓட்டுநர் 6 ஆண்டுகளாக பணிபுரிவதாகவும் அவர் கூறினார். ஆனால் இந்த டிரைவர் புதியவர் என்றும் நேற்றுதான் பணிக்கு வந்தார் என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
தரமற்ற பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து கடந்த 23ம் தேதி எப்சி காட்டப்பட்டுள்ளது. அப்போது, பேருந்து இயக்க தரமற்றது என்று வட்டார போக்குவரத்து அலுவலர் சான்றிதழ் அளித்துள்ளார். பின்னர் பேருந்து மீண்டும் எப்சி காட்டப்பட்டுள்ளது. அப்போது, பேருந்துக்கு நற்சான்று வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பேருந்தை இயக்க எப்படி அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
விபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி முனுசாமி கூறியுள்ளார்.