ராஜீவ் கொலையில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் வீட்டு பாதுகாப்புப் பணியில் மற்றொரு ராஜீவ்!
ஜோலார்பேட்டை : ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோலில் வெளிவந்துள்ள நிலையில் அவருடைய வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசாரில் ராஜீவ் என்ற ஒருவரும் இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெற்றோரின் உடல்நிலை சரியில்லாததால் அவர்களை பார்த்துக் கொள்ள பரோல் தர வேண்டும் என்று பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். இதே போன்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சொல்லி வந்த நிலையில் நேற்று மாலை திடீரென பேரறிவாளனை பரோலில் விட அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து ஒரு மணி நேரத்தில் நேற்று இரவே பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
— Mahalingam Ponnusamy (@mahajournalist) August 25, 2017 |
ஆனந்தக் கண்ணீர்
பேரறிவாளனை பார்த்து நெகிழ்ந்து போன அவரின் தாயார் அற்புதம்மாள், ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பேரறிவாளனை அவர்களது உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
|
கடுமையான நிபந்தனைகள்
எனினும் பேரறிவாளனுக்கு 20க்கும் மேற்பட்ட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு 30 அடிக்கு மேல் தாண்டி போகக் கூடாது, இரவு நேரத்தில் வெளியாட்கள் வீட்டில் தங்கக் கூடாது.
|
போலீசார் அறிவுறுத்தல்படியே
குடும்ப விழாக்களில் பங்கேற்கலாம், பொது நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களை சந்திக்கலாம், எனினும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மறுப்பு தெரிவித்தால் அந்தத் தலைவர்களை பேரறிவாளன் சந்திக்கக் கூடாது உள்ளிட்டவை அவற்றில் சில.
வரிசை கட்டும் பார்வையாளர்கள்
பரோலில் வந்துள்ள பேரறிவாளன் வீட்டை சுற்றி 23 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரறிவாளனை பார்க்க வருவோர் வரிசையில் நின்று பெயர்களை போலீசார் பதிவு செய்த பின்னர் 4 பேர் வீதம் பேரறிவாளனை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
|
பாதுகாப்புப் பணியில் ராஜீவ்
இந்த 23 போலீசாரில் வேலூர் ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த ராஜீவ் என்ற போலீஸ்காரரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் சிறை சென்றவர் பரோலில் வந்த நிலையில் அவரை பாதுகாக்கும் பணியில் மற்றொரு ராஜீவ் ஈடுபட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.