முதல்வர் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்றுவார்: அற்புதம்மாள்
சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரணமாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வருவார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்தார்.
உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 15 நாட்களாக மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேற்று அப்போலோ மருத்துவமனை சென்றார். அவர் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் இரண்டாவது தளத்திற்கு சென்றார்.
பின்னர் வெளியே வந்த அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வரை சந்திக்க அப்பல்லோ மருத்துவமனையின் 2வது தளத்திற்கு சென்றேன். அங்கு அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரை எம்.பி., ஆகியோரை சந்தித்தேன். முதல்வருக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடன் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தனர்.
சாதாரண மருத்துவமனையிலேயே இது மாதிரி கெடுபிடி இருக்கும். பெரிய மருத்துவமனை, முக்கியமான நபர் என்பதால் அதிகமாக இருப்பதை உணர்ந்துகொண்டேன். முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் விரைவில் பூரணமாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வருவார் என்றார்.